புதன், 2 பிப்ரவரி, 2011

கனவை களவாடியவர்கள்

நான் மாலையில் வீட்டிற்க்கு திரும்போது கே.கே.நகர் டெப்போவைக் கடந்த உடனே அங்கு இருந்த போலீஸ், ரோட்டில் வந்த வாகனங்களையொல்லாம் வலது பக்கமாய் திருப்பிவிட்டார்கள். எதோ அரசியல் கட்சியின் பொது கூட்டமாம். வேறவழியில்லாமல், ஊரை சுற்றி வீடு வந்து சேர்ந்தேன். வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு செல்லும்போது எதிர் பட்ட மூர்த்தி சாருக்கு ‘ குட் ஈவினிங் ‘ என்றேன்.

’குட் ஈவினிங், குட் ஈவினிங். என்ன மீட்டிங்குனு சொல்லி திருப்பிவிட்டானா?’

’ஆமா சார்’

‘ஆளும் கட்சி கூட்டம்தான். இலவசங்களை வழங்குவதையே அரசுக் கொள்கையாக வைத்திருகின்றார் முதலமைச்சர். ஆயிரத்தி ஐநூறு போருக்கு கேஸ் அடுப்பாம். இலவசமாக இப்படி வாங்கியே சொசைட்டி உருபடாமல் போகுது... ’னு சொல்லிவிட்டு சென்றார் மூர்த்தி சார்.

சென்னை நகர வாசிகளில் சிலர் இப்போதுதான் கேஸ் அடுப்பை உபயோகிக்கப் போகின்றார்களா?. நாங்கள் எப்போது கேஸ் அடுப்பை பயன் படுத்த ஆரம்பித்தோம் என யோசித்தேன். நன்றாக ஞாபகமிருக்கின்றது. 35 வருடங்களுக்கு முன்பு. எங்கள் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் அப்போது நாங்கள் இருந்த வீட்டிற்க்கு எதிரிலேயே புதுவீடு கட்டி குடிபுகுந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. அப்போது என் அப்பாவின் நண்பர் சின்னம்ம ராஜு என்பவர், எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரான ராஜபாளையத்தில் கேஸ் ஏஜன்ஸி எடுத்திருந்தார். ராஜபாளையம் பெரிய ஊர். அதனால் அங்கு கேஸ் ஏஜன்ஸி கொடுத்திருந்தார்கள். அவரும் அந்த ஊர்காரர்தான். என் அப்பாவை சந்தித்த அவர், கேஸ் கனெக்‌ஷன் வாங்கச் சொல்லியிருக்கின்றார். அப்பாவும் அம்மாவிடம் கேட்டு சரி என்று சொல்ல, அடுத்த நாளே வீட்டில் கேஸ் அடுப்பு ரெடி. அப்போதெல்லாம், கேஸ் கனெக்‌ஷன் வாங்கினால், அவர்களிடம்தான் அடுப்பும் வாங்க வேண்டும். அடுப்பின் விலை, கேஸ் கனெக்‌ஷன் டெப்பாசிட்டைவிட அதிகம்.

கேஸ் அடுப்பு வந்த புதிதில், என் அம்மாவுக்கு ஒரே சந்தோசம். சமையல் சட்டுனு முடியுதுனு சொல்லுவார்கள். வீட்டில் சாயங்காலமானால் ஒரே பெண்கள் கூட்டம். எல்லாம் கேஸ் அடுப்பை பார்க்கதான். வருகின்றவர்களுக்கெல்லாம், கேஸ் அடுப்பிலே பாலை சூடு பண்ணி காப்பி போட்டு கொடுப்பார்கள் என் அம்மா. காப்பியை குடித்துவிட்டு அவர்கள் அடித்த கமெண்ட்களை நினைத்தால், சிரிப்புதான் வருகின்றது. அதில் சில....

- கேஸ் அடுப்பிலே போடுகிற காப்பி நல்ல டேஸ்டா இருக்கு.
- கரி அடுப்பைவிட கேஸ் அடுப்பு காப்பி வித்தியாசமாய்தான் இருக்கு.
- கேஸ் அடுப்பிலே போட்டா காப்பிக்கு பால் கம்மியாதான் சொலவகும்

வர வர பெண்களின் வருகை கூடிக்கொண்டே போனதால், அம்மாவிற்க்கு காப்பி கொடுத்து கட்டுபடியாகவில்லை. என்ன பண்ண? கேஸ் அடுப்பை பார்க்க வந்தவர்களுக்கு எப்படி டொமோ (Demo) காண்பித்து பெருமை பட்டு கொள்வது? காப்பியும் கட்டுபடியாகது. சரி, இருக்கவே இருக்கின்றது – கேஸ் அடுப்பில் தண்ணீரை சூடு பண்ணி, ‘சுடு தண்ணீர்’ கொடுப்பது. (சுடு தண்ணீர் குடித்துவிட்டு என்ன கமெண்ட் அடித்தார்கள் என எனக்கு நினைவில்லை). இந்த கூத்தெல்லாம், ஒரு வார காலத்திற்க்குதான். கூட்டதில் வந்த யாரோ ஏதோ சந்தேகம் கேக்க, என் அம்மா கேஸ் அடுப்பில் சமையல் செய்வதையே நிறுத்திவிட்டார்கள். என் அம்மாவிற்க்கு அடுப்பை பத்தவைக்கவே பயம். ஏன் நிறுத்தினார்கள்?வந்தவர் அப்படி என்ன சந்தேகம் கேட்டார்கள்?

“ஏங்க்கா........மதுரையில ஒரு வீட்டில கேஸ் அடுப்பில சோறு வடிக்கும் போது அடுப்பு வெடித்து ஒரு பொம்பள செத்து போனது உண்மையா?”

இத கேட்டுத்தான் என் அம்மாவுக்கும் பயம். அதன் பின், ராஜபாளையத்திலிருந்து கேஸ் ஏஜன்ஸி ஆட்கள் வந்து, எடுத்து சொல்லிய பிறகு சமைக்க ஆரம்பித்தார்கள். உடன் இருந்த என் அப்பாவின் பாதுகாப்பு சான்றிதழ் (Safety Certificate) வேற, என் அம்மாவிற்க்கு மனதளவில் ஊக்கமளித்தது. (இத்தனைக்கும், சமையல் அறையில் என் அப்பாவை நான் பார்த்தது, அது இரண்டாவது முறை).

வருடங்கள் பல ஓடிவிட்டன. இப்போது நான் சென்னையின் அப்பார்ட்மெண்ட் வாசி. எங்கள் அப்பார்ட்மெண்டில் மொத்தம் இருபத்திநாலு வீடுகள். நான்கு தளங்கள். அதில் பதினாலு வீடுகளில் வாடகை-குடித்தனகாரர்களும், மீதி பத்து வீடுகளில் உரிமையாளர்கள் இருக்கின்றோம். வாடகையிருப்பவர்கள், எவ்வளவு வாடகை கொடுகின்றார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாடகை. ஆனா குறைந்த மாத வாடகையே ரூபாய் 10,000. இங்கு மொத்தம் 12 பேர் கார் வைத்திருக்கின்றார்கள். 21 இரண்டு சக்கர வாகங்கள். இங்கு உள்ளவர்கள் தனியார் துறையிலும், வங்கிகளிலும் உயர் பதவிகளிலும், மென்பொருள் துறையிலும் வேலை பார்பவர்கள். நல்ல தண்ணீர் வசதி. அமைதியான சுற்றம். என்னடா, அப்பார்ட்மெண்டை பற்றி இவ்வளவு விளக்கம் எதற்கு? வேற எதுவும் இல்லங்க. பொருளாதர ரீதியில் எந்த மாதிரியானவர்கள் வசிக்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டவே எழுதியது. மத்தியதர வர்க்கத்தை Lower middle, Middle middle, upper middle னு மூறாய் பிரித்தால் நடுவிலிருக்கும் “நடு நடு (Middle middle)’ தான் எங்கள் அப்பார்ட்மெண்ட் என்பது புரிந்திருக்கும்.

அப்பார்ட்மெண்டிக்கு மின்சாரம் மீட்டர் ரீடிங்க்கு E.B யிலிருந்து வரும்போது வாட்ச்மேன் எல்லோருக்கும் கேக்கும்படி விசில் ஊதூவார். வீடுக்காரர்கள் வந்து ரீடிங்கை பதிவு செய்து கொள்வார்கள். வாட்ச்மேன் ’விசில் ஊதூவது’ என்பது எல்லோருக்குமான அறிவிப்பு. சென்ற மாதம், ஒரு ஞயிற்றுக் கிழமை காலையில் விசில் ஊதினார். ஊதிவிட்டு, “டி.வி கொடுக்காங்க, ரேசன் கார்டுடன் வாங்க”னு குரல் கொடுத்தார். அப்பார்ட்மெண்டிலிருந்த அனைவரும் ரேசன் கார்டுடன் ஒடினார்கள், மூன்று வீட்டுக்கரர்களை தவிர. ஒன்று எங்கள் வீடு, மற்றொன்று அடுத்த பிளாக்கில் இரண்டாவது மாடி வீட்டுக்காரர்கள், மூன்றாவதாய் உள்ளவர் அன்று வீட்டில் இல்லை, ஊருக்கு சென்றிருந்தனர். அப்பார்மெண்டிக்கு வந்த சென்னை கார்பரேசன் அதிகாரிகள், ரேசன் கார்டில் ஏதோ குறித்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு டோக்கன் கொடுத்தார்கள். டோக்கன் பொற்றவர்கள், தெருவின் முனையில், அம்மன் கோவில் அருகில் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் டோக்கனை காண்பித்தார்க்ள். அவர்கள் லாரியிலிருந்து .டி.வி ஒன்றை வாங்கிக் கொண்டு திரும்பினார்கள், எங்கள் அப்பார்ட்மெண்ட் வாசிகள். அப்படி வாங்கியவர்களில் மூர்த்தி சாரும் ஒருவர். அப்போது எனக்கு கேட்க வேண்டும் என தோன்றியது, ஆனால் கேட்கவில்லை.

மூர்த்தி சார், டி.வி வேண்டும் என்று ஏங்குபவர்கள், வீட்டில் டி.வி இல்லாத எழைகள். அவர்களுக்காக அரசங்கம் கொடுக்கும் டி.வியை ஏன் நீங்கள் வாங்கிச் செல்லுகின்றீர்கள்?. உங்கள் வீட்டிதான் பிளாஸ்மா டி.வி இருக்கின்றதே!.
கிடைக்கும் என்று கனவு காணும், எழையின் கனவை ஏன் களவாடுகின்றீர்கள்?

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்