ஞாயிறு, 27 மார்ச், 2011

வெளிநாட்டு வாழ் இந்தியன் (NRI)

தூர தேசத்தில்
தொலைந்துபோனவர்கள்
காணாததை கண்டதும்
காணாமல் போனவர்கள்

இந்த விழுதுகள்
மரத்தையே
அழுக்கென அறிவிக்கும்

விடுதியையே
வீடாக்கி கொண்டவர்கள்
விடுமுறைக்கு மட்டுமே
வீடு திரும்பும் பறவைகள்

வான் கோழியாய்
வாழ விரும்பும்
மயில் கூட்டங்கள்

வாழ்கை துணைக்கு
வலைபோட்டு தேட
இந்திய கடலுக்கு
மீன் பிடிக்க வருவார்கள்

தமிழ் மொழியே
தரமில்லை என
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

பெற்றோர்க்கு
முதியோர் இல்லத்தையே
முகவரியாக்கிய
முன்னோடிகள்

இந்தியாவில் அமெரிக்கனாயும்
அமெரிக்காவில் இந்தியனாயும்
அரிதாரம் கொண்டவர்கள்

அன்னியர் தேசத்தில்
இந்திய அடையாளம்
இந்திய தேசத்தில்
அன்னியர் அடையாளம்
பால்ராஜன் ராஜ்குமார்