புதன், 22 டிசம்பர், 2010

ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜானார்

“ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம்: சி.பி.ஐ, விசாரணையை நேரடியாக கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு (தினமலர், டிசம்பர் 16, 2010)”

இதைப் படித்த உடனே எனக்கு சந்தோசம். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகள் பிரச்சினையை உச்சநீதிமன்றம் எப்படி கிடுக்கி பிடிபோட்டு இறுக்குகின்றது?. இந்த உத்தரவை போட்ட நீதிபதி, நமது நாட்டைக் காக்க வந்த கடவுள் மாதிரியேதான் தெரிந்தார். ஏன், உச்சநீதிமன்றமே ஒரு கோவிலாகத்தான் தெரிந்தது. எனக்கு ஊழல் இல்லா சமுதாயத்தில் வாழத்தான் பிடிக்கும். அதானால்தான் சந்தோசம். சரி இதை யாரிடமாவது பகிர்ந்து கொண்டு, அவர்களையும் மகிழ்விக்கலாமே என்று நினைத்து, ராஜப்பாவுக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு, ஹா ...ஹானு வாய்விட்டு சிரித்தார். எனக்கு அவர் சிரிப்பதின் அர்த்தம் புரியவில்லை.

“ஏன்?”னு கேட்டேன்.

“நீ சொன்ன செய்தியையும் உன்னையும் நினைத்துத்தான்”

“புரியலயே”னு சொன்னேன்.

”புரியும்படி சொல்றேன்”.

”சரி”

“ உச்சநீதிமன்றமே ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன்னை ஒரு கண்காணிக்கும் நிறுவனமாய்
பிரகடனப்படுத்திக் கொண்ட உத்தரவுதானே உன் சந்தோசத்திற்கு காரணம்?.”

“ஆம்”

”சரிதான். நீதிபதிகள் அனைவரும் கங்காணியாகிவிட்டர்கள்”

“என்ன சொல்றீங்க”

“நீதிபதிகள், சி.பி.ஐ.யின் வேலையை கண்காணித்தால், நீதிமன்ற வேலையை யார்
பார்ப்பது?”

”???”

“இந்திய நீதிமன்றங்களில் 30000000 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒரு வழக்கில் குறைந்தது இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருந்தாலும், 60000000 பேர் காத்திருகின்றார்கள். அதுவும் வருடக்கணக்கில். எவ்வளவு காலவிரையம். ஐந்து வருடங்களுக்கு மேல் விசாரணைக் கைதியாக லட்சக்கணக்கானோர் சிறைசாலைகளில். வழக்கு துவங்கப்படாமலோ, வழக்கு மந்தமான முன்னேறத்தாலோ, வாழ்வை தொலைத்துவிட்டு சிறையில். அதில் நிறையபேர் நிரபராதியாகக்கூட இருக்கலாம். இந்த தாமதத்தை யார் கண்காணிப்பது?”

”நீங்க சொல்லுவது சரிதான்”

“இதுக்குத்தான், கிராமத்தில் அவங்க துருத்தியை அவங்க அவங்க ஊதணும்னு சொல்லுவாங்க”

”துருத்தினா?” னு கேட்டதற்கு பதிலே சொல்லாமல், ராஜப்பா தொடர்ந்தார்.

“சில மாதங்களுக்கு முன்பு வெளியான போபால் விஷவாய்வு தீர்ப்பு வந்தபோது, நாடு முழுவதும் ஒரே களேபரம். பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி இல்லை. இறந்து போன 20000 பற்றியுமல்ல. உயிர் பிழைத்தவர்கள் இன்றுவரை படும் அவதியை பற்றியுமல்ல. கண்பார்வை போனவர்களைப் பற்றியோ ஊனமுற்றவர்களைப் பற்றியோ அல்ல. அப்ப ஏன் களேபரம்?. சம்பவம் நடந்த போது, யூனியன் கார்பைடு கம்பெனியின் நிர்வாகி ஆண்டர்சனை தப்பவிட்டது யார்? ராஜீவ் காந்தியா? அர்ஜுன் சிங்கா?”

”ஆம் அப்படித்தான் நடந்தது”

“25 ஆண்டுகள் கழித்து கிடைத்த தீர்ப்பில் தப்பியது நீதிதான். கிடைக்காமல் போனது நீதிதான். இதை யார் கண்காணிப்பது.?”

”ம்”

”சென்ற ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தை, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று கேட்டார்கள். ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் அப்படிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிடவில்லை. சி.பி.ஐ. விசாரணைக்கு போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?”

”தெரியவில்லையே”

” ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜாயிருப்பார்”

“ஒண்ணுமே புரியவில்லையே”

”அப்படி நடந்திருந்தால் நீதிபதிகள் சி.பி.ஐ. வேலையை கண்காணித்திருப்பர்கள். நீதிபதிகள்தாம் சி.பி.ஐ.யின் வேலையை கண்காணிப்பார்களேனு, சி.பி.ஐ.ல உள்ளவர்கள் ரயிலைத்தான் ஒழுங்கா ஒட்டுவதற்கு ஆள் இல்லைனு, ரயில் ஒட்ட சென்றிருப்பார்கள். ரயில் ஓட்டத்தான் சி.பி.ஐ. ஆபிசர்கள் வந்துவிட்டார்களேனு. ரயில் ஒட்டுனர்கள் உட்கார்ந்து யோசித்ததில், ஆளில்லா லெவல் கிராசிங்கில் குறுக்கே வந்த ஜட்கா வண்டிதான் விபத்துக்கு காரணம்னு புரிந்துபோயிருக்கும். ஜட்கா வண்டியை ஒழுங்கா ஓட்டினால், விபத்தே நடந்திருக்காதுனு தெரிந்து, ரயில் ஒட்டுனர்கள், ஜட்கா வண்டி ஓட்டப் போயிருப்பார்கள். ஜட்கா வண்டிக்காரருக்கு என்ன செய்யனு தொரியாம, சரி நீதிபதி வேலைதான் ஆளில்லாமல் சும்மாயிருக்குனு - ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜாயிருப்பார்.”

“!!!”




(குறிப்பு:

‘துருத்தி’ என்பது ஆட்டுத் தோலினால் ஆன ஓர் ஊது இயந்திரம். இரும்புக் கொல்லரிடம், உலேகத்தை சூடாக்க உபயேகிக்கப்படும். ‘உன் துருத்தியை ஊது’ என்றால் ‘உன் வேலையை பார்’ என்பது)

சனி, 18 டிசம்பர், 2010

காண் என்றது இயற்கை

எனக்கு எட்டாம் வகுப்பு முழுஆண்டு தேர்வு முடிந்திருந்த நேரம். கட்டிப்போட்டிருந்த வெள்ளாட்டாங்குட்டியை அவிழ்த்துவிட்டால் அங்கும் இங்கும் குதித்தாடுமே அதேமாதிரி இரண்டு வாரங்கள் தெருவில் விளையாடினோம். அதன்பின்னர் ஒரு நாள் விளையாட நாங்கள் படித்துக்கொண்டிருந்த சி.எம்.எஸ். பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்திற்க்கு சென்றோம். அங்கிருந்து பார்த்ததில் மலையும் வனமும் அன்று வியப்பாய் தெரிந்து எனக்கு. மலை என்னைவாஎன்று என்னை அழைப்பது போல் இருந்து. ‘செண்பக தோப்புக்கு போகலாமாடா?’னு உடனிருந்த நண்பர்களிடம் கேட்டேன். எல்லோரும்சரிஎன்றார்கள். ‘யாருக்காவது வழி தெரியுமா?’. நாராயணன் தெரியும்னு சொன்னான். எங்கள் ஆறுபேரில் அவன் மட்டுமே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய, எங்களைவிட மூத்தவன். அங்கிருந்து மேற்கே செல்லும் மண் சாலை வழியே நடக்க ஆரம்பித்தோம். நடக்க நடக்க வனமும் மலையும் அருகில் வந்தன. செண்பக தோப்பில், மரமும், செடியும், கற்களும், பாறைகளும், மலையும் மௌனமாய் ஆனால் வசீகரமாய் என் முன்னே நிற்பதை உணர்ந்தேன். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. பசியறியாது வனத்தில் உலவியதில் நேரம் போனதே தெரியவில்லை யாருக்கும். அந்த வழியே வந்த ஒரு பெரியவர், எங்களை பார்த்துடேய் சாயங்காலமாயிருச்சி........வீட்டுக்கு போங்கஎன்று சொன்னார். நேரமானால் காட்டு விலங்குகளெல்லாம் வருமுனு உண்மையைச் சொல்லி பயமூட்டினார். எனக்குத்தான் அங்கிருந்து வரவே பிடிக்கவில்லை. வனமும் மலையும் சினேகமாயிருந்தன. வீட்டிற்க்கு கூட்டிக்கொண்டு வந்துவிட தேன்றியது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்து, மேற்படிப்பிற்க்காக வெளியூருக்கு செல்லும்வரை பல தடவைகள் அங்கு சென்றிருக்கின்றேன். காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு விடுமுறைகளில் செண்பக தோப்பிற்க்கு சென்று மலையோடு மௌனமாய் பேசிய நாட்கள் பல. கல்லூரி நாட்களில் மூன்று நான்கு முறைதான் செல்ல முடிந்தது. அந்த குறைந்த வாய்ப்புகளும், நண்பர்களும் அதற்கு பின் கிடைக்கவில்லை. ஆனால் வனத்தையும் மலையையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்து கொண்டிருந்தது.

நேற்று மலையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும், மிக அருகில் சென்று பார்க்க முடிந்தது. ஆம், என்னை எஸ். ராமகிருஷ்ணன்தான் அழைத்து சென்றார். என் கைகளை இறுக பற்றியே நடந்து சென்றது மாதிரி ஓர் உணர்வு. அப்போது அவரின் மனம் மலையை தின்பதற்கு ஆசைப்பட்டதையும் காண முடிந்தது. என் மன உணர்வுகளையும், மலையின் மௌனத்தையும் வார்த்தைகளில் ‘மலை தோன்றுகிறது’ கட்டுரையில் கொட்டிவிட்டு சென்றார்.

சிறுவயதில், எனக்கு பள்ளித் தேர்வு விடுமுறைகளில் மட்டுமல்லாது, பிற நாட்களிலும் மற்றுமொரு மனமொத்த பொழுதுபோக்கு, செடிகள் வளர்ப்பது. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் எல்லாவகையான காய்கறிச் செடிகளையும் நானும் எனது தம்பிகளும் வளர்ப்போம். அதிலும் எனக்கு, கொத்தமல்லிச் செடி வளர்க்க ரொம்பப் பிடிக்கும். அது விதைத்ததிலிருந்து வேகமாய் வளரக்கூடிய செடி. தோட்டத்தில் மண்ணைத்தோண்டி, கிளறி விட்டு, மல்லி விதையை விதைத்து தண்ணீர் ஊற்றி, அது முளைவிடும் வரை மண்ணை பார்த்துக் கொண்டிருப்பேன். துளிர்விடும் முதல் இலையிலிருந்து ஒவ்வொரு இலையும் பரிட்சயமாகிவிடும். ஒருநாள், காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்முன் பார்த்த, நன்கு வளர்ந்த மல்லிச் செடி, காணாமல் போய் மதிய உணவில் துவையலாய் வந்து உக்காரும். கொத்தமல்லி துவையலை சாப்பிடப் பிடிக்காமல் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு, ரசச்சோற்றை சாப்பிட்டுவிட்டுச் செல்வேன். நான் செடிகளிடம் உரையாடிய நிகழ்ச்சிகளையும் உறவாடிய நாட்களையும் இப்போது நினைத்தாலும் சிறுபிள்ளையின் விளையாட்டு என்று புறந்தள்ள முடியவில்லை. ராமகிருஷ்ணனின் ‘சிறு செடி’ கட்டுரை, கொண்டாடிய நாட்களை நினைவுக்கு கொண்டுவருகின்றது.

தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் போது யானையின் மணிச் சத்தம் கேட்டால், எந்த விளையாட்டாயிருந்தாலும் அப்படியே கைவிட்டுவிட்டு ஓடிவிடுவோம். அது ஆண்டாள் கோவில் யானை ‘கணேசா’னு ஊரிலுள்ள எல்லா பசங்களுக்கும் தெரியும். அதற்கு பின்னால், பத்து பதினைந்து பசங்க ஓ.....ஓனு ஊளையிட்டுக்கொண்டே ஓடிவருவார்கள். அவர்களுடன், நாங்களும் இணைந்து கொள்ளுவோம். இது, அந்த கால கிரேக்க ஒலிம்பிக்ஸ் மாதிரிதான் – ஆண்களுக்கு மட்டுமேயானது. யானையை கோயில் கொண்டு சேர்க்கும் போது மொத்தம், எப்படியும் இருபது முப்பது பசங்களாவது தேறுவோம். இப்போதும்கூட, யானையை கண்டால், நின்று பார்க்காமல் கடந்து செல்ல முடியாது. அது யானை ‘கணேசா’வாக இருந்தாலென்ன? அல்லது கல் யானையாயிருந்தாலென்ன? அதன் வசீகரம் அப்படி. ’யானை பார்த்தல்’ கட்டுரையும் நம்மை வசியம் செய்துவிடுகின்றது.

’மழையில் நனையாதே....காய்ச்சல் வந்திரும்’ னு சொல்லாத அம்மாக்களும் இருந்ததில்லை, கேட்கப்படாத குழந்தைகளும் இருந்ததில்லை நம்மூரில். ஆனால் குழந்தைகளுக்கு ’மழை என்ன செய்யும்?’ என்ற கேள்விதான் தொக்கிநிற்கும் மனதில். மழை, நம் வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் வித விதமான அனுபவத்தைத்தான் பொழிந்திருக்கின்றது. மழை பற்றி மூன்று கட்டுரைகளும் இப்படித்தான். கண்முன் மழையை நிறுத்திவிடுகின்றார். நாமும் நனைந்து விடுகின்றோம்.

நாம் குற்றாலத்தின் பாறைகளில் சத்தமிடும் அருவிகளை பார்த்து அனுபவித்திற்கின்றோம். பாறைகளில் சத்தமிடாமல் வழியும் வெயிலை நமக்கு காண்பிக்கின்றார் ராமகிருஷ்ணன். சத்தத்தில் குளித்துப்பழகிய நமக்கு நிசப்த்தத்தில் குளிப்பதும் சுகமாய்த்தான் இருக்கின்றது. வெறுமையும் இருப்புதானே.


வெயிலில் அலைந்து திரிந்து கிறங்கிய ராமகிருஷ்ணனும் அவரது நண்பரின் முகத்தை கண்டு முன்பின் தெரியாத பெண்ணின் ’சாப்பிட்டுட்டு போறீங்களா சார்’ என்ற உபசரிப்பு, ஒரு கிராமத்தின் பிம்பத்தை ‘மைனா அலையும் பகல்’ கட்டுரையில் கிடைக்கச்செய்கின்றார்.

ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கும்போதும் என்னுடைய பழைய நினைவுகளைக் கிளறி விடுகிறது. என்னுடன் தெரு புளுதியில் உருண்ட மழையில் நனைந்த என் இளம் வயது பையனாய் ராமகிருஷ்ணன் இருப்பதை உணர்வுபூர்வமாய் உணர்ந்தேன்.

ராமகிருஷ்ணனின் ‘காண் என்றது இயற்கை’ நூல் இரண்டு பிரிவுகளை கொண்டது. முதல் பிரிவு, ’இயற்கை அறிதல்’. அதன் வாசிப்பில் கிடைத்த அனுபவங்கள்தான் மேலே சொன்னது. ஒவ்வொரு கட்டுரையும் என்னுடைய சிறு பிராயத்தின் நிகழ்வுகளை என் உடனிருந்து எந்தன் அனுவபத்தை பங்கிட்டு கொண்ட நண்பனின் நுண்ணிய பகிர்வாய்த்தான் உண்ர்ந்தேன்.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து என்னுடைய அம்மா ஆனந்த விகடன், குமுதம், கல்கி வாரப்பத்திரிகைகளை படித்துக் கொண்டுருந்தார்கள். அதில் வரும் தொடர் கதைகளை கிழித்தெடுத்து பையிண்டு செய்து புத்தகமாய் உருவாக்கிவிடுவார்கள். சாண்டில்யனிலிருந்து,தேவன், …போன்றோர்களின் கதைகளை அப்படித்தான் வாசித்துக் கொண்டிருந்தோம். இந்த Home Made Booksல் கதை படிப்பதில் மற்றுமொரு பயனுமுண்டு. பிரதான கதையுடன் சேர்த்து ஆங்காங்கே ஜோக்குகளும் சுவாரசியமான கட்டுரைகளும் படிக்க கிடைக்கும். அது மாதிரிதான், ‘காண் என்றது இயற்கை’ நூலின் இரண்டாவது பிரிவு – அனுபவம்.

’மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ என்று நமது உடல் நலனை சோதிக்க பெருநகர மருத்துவ மனைகளில் வசதிகள் இருக்கின்றன. வருடத்திற்கு ஒருமுறை சென்று சோதித்துக் கொள்ளலாம். மனநலனை சோதிக்க ஏதாவது வழி இருக்கின்றதா?. இருக்கின்றது. ராமகிருஷ்ணனின் அனுபவத்தில் வரும் ‘எலிக்கடி’ யை படித்துவிட்டு வாய்விட்டு தொடர்ந்து சிரித்தீர்கள் என்றால், நீங்கள் நல்ல மனநலனோடு இருக்கின்றீர்கள் என்பது நிச்சயம். இதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை படித்துபார்த்து........சிரித்து...சோதித்துக்கொள்ளவது நலம்.



புத்தகத்தின் தலைப்பு : காண் என்றது இயற்கை
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீட்டளர் : உயிர்மை பதிப்பகம், சென்னை.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

மோசடி என்றொரு மோசடி

இரண்டாம் தலைமுறை அலைபேசி மோசடி (2G Spectrum Scam) பற்றிய செய்திகளை படித்தவுடன் எனக்கு, “உண்மையான் உண்மை”, “பொய்யான உண்மை”, “பொய்யான பொய்”, “உண்மையான பொய்” பற்றிய நினைவுகள்தான் வந்தது. அத்துடன் பத்திரிக்கையில் படித்த மேலும் ஒரு காமெடியும் கூடவே நினைவுக்கு வந்தது.

’அப்பா கோரிப்பாளையத்திலிருந்து நம்ம வீட்டிற்க்கு பஸ்ஸில் வந்தால் டிக்கட் எவ்வளவு?”

”நாலு ரூபாய்” என்றார் அப்பா.

“அப்ப நான் நாலு ரூபா சேமித்துவிட்டேன்”

“எப்படி?” அப்பா

“நான் பஸ்ஸில் வருவதற்க்கு பதில், பஸ்ஸுக்கு பின்னால் ஒடி வந்தேன்”

ஒரு வினாடி சந்தோசப்பட்ட அப்பா, “அட போடா முட்டா பையலே, நீ பஸ்ஸுக்கு
பின்னால் ஓடி வந்தற்க்கு பதில் டாக்ஸிக்கு பின்னால் ஒடி வந்திருந்தால் நாற்பது ரூபாய் சேமித்திருகாலாமே” என்றார்.

மகன் சேமித்ததாய் சொன்ன நாலு ரூபாயும் சரி, அப்பா சேமிக்கச்சொன்ன நாற்பது ரூபாயும் சரி, இவை யாவுமே கருத்தியல் (notional) சேமிப்பே தவிர உண்மையானது அல்ல.


இதைப்போலத்தான் இரண்டாம் தலைமுறை அலைபேசி மோசடியும் உள்ளது. எல்லோரும் சொல்லுகின்ற அரசங்கத்திற்க்கு உண்டான இழப்பும், டாக்சிக்கு பின்னால் ஒடி சேமித்தமாதிரிதான். இந்த கருத்தியல் இழப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். எண்களில் சொன்னால் – 150000,00,00,000 ரூபாய். இந்த கணக்கில் இரண்டுவகையான முட்டாள்களும் ஒரே மாதிரியான பாட்டைத்தான் பாடுகின்றார்கள். படித்த முட்டாள், பாடிக்காத முட்டாள் என்ற இரண்டு வகை சரிதானே?. உரிமைத் தொகையாக (license fee) அரசங்கம் இழந்த தொகைதான் இவ்வளவு பெரிய பணம் என்கின்றார்கள். இந்த இழப்பிற்க்கு மொத்த பொறுப்பாளியாக மத்திய அரசின் முன்னாள் தகவல் தொடர்பு மந்திரி அ. ராசா என்று சொல்லுகின்றார்கள். ஆரம்பத்தில் வருமான இழப்பு என்று ஆரம்பித்து, பின்னர் அ. ராசாதான் கையூட்டாக இவ்வளவு தொகையையும் பெற்றமாதிரி ஒரு மாயை உண்டாக்க முயற்சி சொயப்படுகின்றது. (என்னை அ. ராசாவின் அனுதாபியாகவோ அல்லது தி.மு.க வின் தொண்டனாகவோ நினைக்கவேண்டாம். பிரச்சினையை எப்படி சமுதாயம் பொதுவெளியில் அலசுகின்றார்கள் என்றே நோக்குகின்றேன்)

வ்ருமான இழப்பிலிருந்து, கையூட்டமாய் மாறிய இந்த அறிவுஜீவிகளால் நடத்தப்படும் நாடகம், அடுத்த கட்டத்திற்க்கு நகர்கின்றது. அதற்கு பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் தகுந்த சூழமைப்பை உருவாக்கித்தருகின்றன. இவ்வளவு பெரிய தொகையை எங்கு பதுக்கி வைத்திருக்கின்றார்கள்? யார்யாரெல்லம் பணத்தை பங்கு போட்டர்கள்?, கருணாநிதியா? கனிமொழியா?, அதற்கு CBI யா விசாரணையா அல்லது JPC கூட்டு விசாராணையா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றார்கள். அதற்காக, இந்த மாதிரியான தொலைதொடர்பு வர்த்தக உரிமையில் ஊழலே நடக்க வாய்ப்பில்லையா? என்றால், யாரும் மறுப்பதற்க்கில்லை. ஆனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கான மோசடி என்று ஒரு பொய்யான பொய்யை பிடித்துக்கொண்டு, மேலும் பயணிக்க வேண்டாம். இப்படி பயணப்படும்போது உண்மையான உண்மைகள் மறைக்கப்படுகின்றன அல்லது நம் கவனத்தை திசை
திருப்பிவிடுகின்றன. அப்படி திசை திருப்பப்பட்ட உண்மைகளில் ஒன்று.....

நமது நாட்டில் அலைபேசி அழைப்பு கட்டணமாய் ஒரு வினாடிக்கு ஒரு பைசா அல்லது ஒரு நிமிடத்திற்க்கு 50 பைசாவாக உள்ளது. இதேமாதிரியான சேவை, அமெரிக்காவில் நிமிடத்திற்க்கு 1100 பைசாவாகவும், இங்கிலாந்தில் நிமிடத்திற்க்கு 900 பைசாவாகவும் உள்ளது. அதாவது இந்தியாவில் நமக்கு கிடைக்கும் சேவை 1500 விழுக்கடு முதல் 2200 விழுக்காடுவரை மலிவாக இருக்கின்றது. தரத்திலோ தொழில்நுட்பத்திலோ குறைந்தது என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உலகத் தரம்வாய்ந்த தொழில்நுட்பம்தான் இங்கும் இருக்கின்றது. நாம் எங்கே புதிய தொழில்நுட்ப்பத்தை கண்டு பிடித்தோம்? வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப்பத்தை பெற்று, அப்படியே பயன் படுத்திகின்றோம். பின்னர் எப்படி நம் நாட்டில் மட்டும் சேவை கட்டணம் குறைவாக இருக்கின்றது? சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உரிமை கட்டணம் குறைவாக இருப்பதால். அதாவது, ஒன்றரை லட்சம் கோடி குறைவாக வசூலித்தால், பொது ஜனங்களுக்கான கட்டணமும் குறைவாக இருக்கின்றது.


நிலமை இப்படி இருக்க, அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ”பொய்யான பொய்யை” ஊர் ஊராய் ஊர்வலமாய் எடுத்து சொல்வதும் மோசடியே.

வெள்ளி, 5 நவம்பர், 2010

என் பாகிஸ்தான் சகோதரிக்கு

நீ நலமாயிருக்க
நான் நலமாயிருக்கின்றேன்
நான் நலமாயிருக்க
நீ நலமாயிருக்கின்றாயா?

சீதனமாய்த்தானே கொடுத்தோம்
ஹரப்பாவையும் மொகஞ்சதாரோவையும்
பாகப்பிரிவினைனு
சொல்லிவிட்டார்கள் பாவிகள்

நம்முடைய பலத்தை
அன்பைவைத்து அளப்போம்
அணுகுண்டுகளை
வைத்து வேண்டாமே

நம் நாட்டின் எல்லையில்
யார் சுட்டாலும் யார் மாண்டாலும்
ஒட்டை விழுவது என்னவோ
நம் இதயத்தில்தானே

உன் தேசம் தண்ணீரில்
மூழ்கியிருந்த போது
நான் கண்ணீரில்
மூழ்கினேன்

உன்மேல் என் அன்பையும்
என்மேல் உன் அன்பையும்
சிந்துவும் பிரிக்கமுடியாது
இந்துவும் பிரிக்கமுடியாது

நான் மட்டும் வாழ்ந்து நீ வீழ்ந்தால்
நான் எப்படி வாழ முடியும்
ஜெய் பாகிஸ்தான்
ஜெய் இந்தியா.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சிலந்தி வலையில் சிறைபட்ட சிங்கங்கள்

நாங்கள் யார்?
குழந்தைகளா
?
தொழிலாளர்களா?, இல்லை
குழந்தைத்
தொழிலாளிகள்

நாங்கள்......
பூவாகாமலே

புதைக்கப்பட்ட
மொட்டுக்கள்


நாங்கள்......
துவக்கத்தையே

தொலைத்த
முடிவுகள்


நாங்கள்......
முகவுரையிலேயே

முடிவுரையாய்
போனவர்கள்


நாங்கள்......
கல்
உடைக்கும்
செதுக்கப்படாத
சிற்பங்கள்


நாங்கள்......
சிலந்தி
வலையில்
சிறை பிடிக்கபட்ட
இளம்
சிங்கங்கள்

நாங்கள்......
ஐம்பதிலும்
வளைவோம்
சம்மட்டி அடித்து
ஐந்திலேயே
வளைந்துவிட்டோமே

நாங்கள்......
இந்தியாவின்
எதிர்கால தூண்கள்
இப்போதைய வேலை
செங்கல்
சூளையில்

நாங்கள்......
மத்தாப்பு
தொழிற்சாலையில்
புஸ்வாணம் ஆகிபோன
எதிர்கால
நட்சத்திரங்கள்

நாங்கள்......
இறக்கைகள்
இருப்பதையே
இருட்டடிப்பு செய்யப்பட்ட
பறவைக்
குஞ்சுகள்

நாங்கள்......
கிழக்கிலேயே

அஸ்தமிக்கும்
சூரியன்கள்


நாங்கள்......
தீப்பெட்டி
தொழிற்சாலையில்
கருகிப்போன
தீக்குச்சிகள்


நாங்கள்......
இந்நாட்டு
மன்னர்களாம்
மாடு மேய்க்கும்
மாயாண்டியுமா
?

எங்கள்
இந்தியாவின்
எதிர்காலம்
இளைஞர்கள் கையிலாம்
பூ
விற்கும் சிறுமி கைலோ பூக்கூடை

நாங்கள்......
சுண்டல்
விற்கும்போது
இளமைப் பருவமே
சுனாமியால்
சுருண்டுவிடும்

நாங்கள்......
சாலையில்
'குழந்தைகள் ரைம்ஸ்'
புத்தகம் விற்கும்

பள்ளிசெல்லா
குழந்தைகள்

நாங்கள்......
திருவிழாவில்
தொலைந்ததுபோல்
திக்கு தெரியாமல்
தொழிற்சாலையில்


நாங்கள்......
குழந்தை
என்ற
முகவரி இழந்த
முகங்கள்


நாங்கள்......
கொண்டாட்டங்கள்
கேட்கவில்லை
கூடங்கள்

பள்ளிகூடங்கள்
தான்

அப்பா......
பள்ளிகூடம்
செல்லும்
பாதை மட்டும்
காட்டேன்
எனக்கு

அம்மா.....
பட்டரை
சுத்தியலைவிட
பாடப்புத்த்கம்
கனமானதா
?

அண்ணா...
சட்டைக்கு
காஜா
போட்டது போதும்
பள்ளிச்
சீறுடை வங்கித்தா எனக்கு

அக்கா....
சிலேட்டும்
பலப்பமும்
வாங்கி கொடேன்
உளிகள்
சுமந்து கை வலிக்கிறது

எங்களுக்கு வேண்டாம்
மே
தினக் கொண்டாட்டம்
எங்களை குழந்தைகளாகவே
இருக்க
விடுங்கள்

கைமட்டும் கொடுங்கள்
எங்கள்
கால்கள்
வாழ்கையின் அடுத்த
அடி
எடுத்து வைக்க !

செவ்வாய், 19 அக்டோபர், 2010

காந்தியும் கை துப்பாக்கியும்

மஹாத்மாவே, உன்னை
எல்லோரும் மறந்து விட்டார்கள்
இப்போது நீ இருப்பது
என் இதயத்திலும்
அரசு விடுமுறை பட்டியலில் மட்டுமே

காந்தி ஜெயந்தி கொண்டாட
எல்லோருக்கும் பிடிக்கும்
வார நாளில் வந்தால்,
ஒரு நாள் விடுமுறை தானே

உனக்கு தெரியுமா?
நாம் நாட்டில் மற்றுமொரு
விடுதலை போராட்டம் நடகின்றது
அஹிம்சை என்ற அறப்போராட்டம் இல்லை
இது ஒரு ஆயுத போரட்டம்

சாதியின் பெயரால்
சகோதரனை சாவடிப்போம்
மதத்தின் பெயரால்
மதில்களை இடிப்போம்

சொன்னால் நம்பமாட்டாய்
இந்த போராட்டதில்
சத்தியாகிரஹமே
செத்துவிட்டது

உன் கைத்தடிக்கு இனி
வேலை இல்லை இங்கு
கை துப்பக்கி
இருந்தால் கொண்டுவா
பால்ராஜன் ராஜ்குமார்