ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மாறாத மேடைகள்

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனது வகுப்பு தோழன் சூரிய நாராயணனின் விட்டிற்க்கு சென்றிருந்தேன். அவன் வீடு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பக்கத்திலிருக்கும் மாடத் தெருவிலிருந்தது. சிறிது நேரம் அவன் வீட்டில் இருந்துவிட்டு கிளம்பி பேசிக்கொண்டே கால் போன போக்கில் சென்றோம். நடந்து தேரடி தெருவு (கீழரதவீதி)க்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எந்த கட்சி?, என்ன பேசினார்கள்? என்றெல்லாம் ஞாபகம் இல்லை இப்போது. எங்களை பொருத்தமட்டில், தேரடியில் கூட்டம் என்பது மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் கூட்டத்திற்க்கு சமம் (என்பது பின்பொரு நாளில் எனக்கு புரிந்தது). பேசிய அனைவரும் தொடக்கத்தில் ஒரே மாதிரிதான் அவர்களின் உரையை ஆரம்பித்தார்கள். குரல், பேச்சில் அமைந்த ஏற்ற இரக்கம் கூட ஒரே மாதிரி இருந்ததாய்த்தான் மனதில் நினைவாடுகின்றது. அன்று மெய் மறந்து கூட்டத்தில் இருந்துவிட்டு வீட்டிற்க்கு சென்று அம்மாவிடம் அடி வாங்கியது பசுமையாக ஞாபமிருக்கின்றது. வீட்டில் விழுந்த அடியால், அதன் பின் அந்த மாதிரி கூட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பிற்க்கு முயற்ச்சிக்கவில்லை.

மதுரையில் கல்லூரியில் படிக்கும் போது அரசரடியிலிருக்கும் தேம்பாவணி இல்லத்தில்தான் தங்கி படித்தேன். அரசரடி தேமபாவணி இல்லம் என்பது அரசியல் கட்சி கூட்டத்திற்கான இடக்குறி (Landmarkக்கு தமிழில் இடக்குறினு மொழிபெயர்க்கலாமா?). அங்கு கூட்டம் நடத்தாத கட்சியும் இல்லை, பேசாத வளரும், வளர்ந்து கொண்டிருந்த பேச்சாளர்களும் இல்லை. இலக்கிய நயமான (!) மேடை பேச்சுக்கள் பல கேட்டிருக்கின்றேன். இதை விளக்கி சொல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் நீங்களும் நானும் கையெழுதிட வேண்டாம். ஒரு உதாரணத்தை சொன்னாலோ போதும், உங்களுக்கு புரிந்துவிடும். தீப்பொறி ஆறுமுகத்தின் கூட்டம் அடிக்கடி நடக்கும். போதுமா? புரிந்துவிட்டதா? அவர் கூட்டத்திற்க்கு கூட்டமிருக்கும். அதே இடத்தில் திராவிட கட்சிகளிருந்து இடதுசாரி கட்சிகள் வரை அனைத்து கூட்டங்களும் நடக்கும். யாராக இருந்தாலும் உரையின் ஆரம்பம் ஒரே மாதிரிதான் இருக்கும். இதுதான் மேடைபேச்சின் இலக்கணமோ? இருக்கலாம். அது மாத்திரமல்லாது, முதலில் பேசும் பத்து பதினைந்து போச்சாளர்களின் பேச்சும் ஒரே மாதிரிதான் இருக்கும். இந்த பத்து பதினைந்து பேச்சாளர்கள், தலைமை அல்லது முக்கியமான பேச்சாளர்கள் வரும்வரை கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தை (அதுவும் பத்து பதினைந்துதான்) கட்டுக்குள் வைத்திருக்க பேசுவார்கள் !!.

சில நாட்களுக்கு முன்பு சென்னையின் நெசப்பக்கத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்திலும் அதேமாதிரிதான். எல்லோருடைய உரையின் ஆரம்பமும் அப்படியே. அங்கு வைத்திருந்த சவுண்ட் சிஸ்டம், எங்கள் வீடுவரை தெள்ளத் தெளிவாக கேக்கும் படியிருந்த்து (உண்மையை சொல்லனும்னா, வீட்டில் டி,வி கூட கேக்க முடியவில்லை. அவ்வளவு சத்தம்.) என் மனைவிக்குத்தான் எரிச்சல். எனக்கு சுவாரசியமாய் இருந்தது. மெத்தம் பதினொரு பேச்சாளர்கள் உரையாற்றினார்கள், அதிலிருந்து ஒன்று......

‘...................டொக் டொக்....(மைக்கை இரண்டு முறை தட்டினார்)........இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் பொரும் மதிப்பிற்குறிய அண்ணன் கானா. மானா. சங்கர் அவர்களே, அண்ணன் விருகை வல்லல் (வள்ளல்) ராமச்சந்திரன் அவர்களே, அண்ணன் கோவி திருவேங்கடம் அவர்களே, பெருமதிப்பிற்குரிய கழக வீரர் எனது சகலை செங்கை மொக்கையன் அவர்களே, பாலம்மாள் நகர் அண்ணன் ஏழுமலை அவர்களே, எம்.ஜியார் நகர் அண்ணன் அண்ணாமலை அவர்களே, 128 வது வார்டு அண்ணன் கோவிந்த சாமி அவர்களே, 128 வது வார்டு தம்பி புகழேந்தி அவர்களே........

(”அண்ணன் ராமருக்கு இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக அணிவிக்கின்றேன்” என்று சொல்லி யாரே ஒருவர் ராமர் ஆற்றிக்கொண்டிருந்த வீர உரைக்கு நடுவில் புகுந்து மாலை அணிவித்து சென்றார். அனேகமாக அந்த மாணிக்க மாலை கைத்தறி துண்டாகத்தான் இருக்கும்)

........கிருசுனபட்டு அண்ணன் முருகன் அவர்களே, அண்ணன் பீடா முருகேசு அவர்களே, அண்ணன் இலக்கடை மூர்த்தி அவர்களே, அண்ணன் பார்வதி நகர் சீனிவாசன் அவர்களே, அண்ணன் மணிகண்டன் அவர்களே, அண்ணன் விருகை சந்திரசேகர் அவர்களே, அண்ணன் போருர் கிருஷ்ணன் அவர்களே, அண்ணன் ராமாவரம் குணசேகரு அவர்களே, அண்ணன் ராமாவரம் கணேசன் அவர்களே, அண்ணன் ராமாவரம் இருளப்பன் அவர்களே, அண்ணன் ஆள்வார்திருநகர் ராஜு அவர்களே, அண்ணன் டெப்போ சுரேசு அவர்களே, அண்ணன் வலசை இளங்கோ அவர்களே, அண்ணன் திருவொற்றியூர் தமிழரசு அவர்களே,

உங்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு என் பேச்சை ஆரம்பிக்கின்றேன். நான் ஸ்ட்ரைய்ட்டாவே கேக்கிறேன். ராஜா, நீ அடித்த பணத்தை எங்க பதுக்கி வைத்திருக்கின்றாய்? உங்க தலைவர் வீட்டிலயா வெச்சிருக்க? உங்க தலைவருக்கு தில் இருந்தா ஏங்கூட இப்ப இந்த மேடையில் ஒண்டிக்கு ஒண்டி பேசமுடியுமா? நா எங்கேயும் ஒடி ஒழிய மாட்டேன். தையிரியமா நிக்கேன். வரச்சொல் உன் தலைவனை. எனக்கு பின் நிறையப்பேர் பேச இருப்பதால், என்னுடைய உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

(மேலே இருப்பது ஒரு பேச்சாளரின் உரை. பேசிய பதினொரு பேரின் பேச்சை கேட்க வேண்டும்போல் இருந்தால், அதையே மேலும் பத்துதடவை படித்துக்கொள்க.)

பேசும் பொருள் அறியா , யாருக்கும் உபயோமகற்ற உளறல்கள். போக்குவரத்து இடஞ்சல்கள். அளவுக்கு அதிகமான சத்தத்துடன் அலறும் ஒலிபெருக்கிகள். கட் அவுட் வைக்கவும், மேடைபோடவும் ரோட்டை தோண்டி பாழ் பண்ணுவது. மின்சார செலவுகள் (மின் திருட்டுகள்). நேர விரயங்கள்தாம் இந்த மேடை பேச்சுகள். தேர்தல் வேறு வருகின்றது. கேக்கவே வேண்டாம், கட்சிக்காரர்களின் மேடை சேவைகளை. இதில் கட்சி பாகுபாடே கிடையாது. ஆளும் கட்சி, எதிர் கட்சி, எதிரி கட்சி, தோழமைக் கட்சி, தேழர்கள் கட்சி, ஜாதி கட்சி, மத கட்சி, மாநில கட்சி, தேசிய கட்சி, மக்கள் கட்சி, நூற்றாண்டு கண்ட கட்சி, நேற்று பிறந்த கட்சி, உழவர் கட்சி, உழைப்பாளி கட்சி....என்று அனைத்துக் கட்சிகளும் இந்த ஜனநாயக கூத்தை மேடையில் அரங்கேற்றும், தினம் தினமும்.

”அவர்களே......... அவர்களே” னு பத்து நிமிஷம் தொண்டை கிழிய கத்திவிட்டு, அடுத்த நிமிஷம் மேடையைவிட்டு இறங்கி போய்விடுவதுதான் (கட்சி) மேடை பேச்சின் இலக்கணமோ? என்னமோ போங்க அன்றிலிருந்து இன்றுவரை அப்படித்தான். போச்சாளர்களுக்கு போர்த்தும் துண்டு மட்டுமல்ல, அரசியல் மேடைகளும் மாறவே இல்லை.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

அவன் போனாள்

அன்று நானும் என் மனைவியும் காரில் சொல்லும் போது, ஒரு வயதான தம்பதி ரோட்டை கடந்து வந்து கொண்டிருந்ததால், காரை நிறுத்தினேன். கணவர் வயதின் காரணமாய் தளர்ந்து போயிருந்தார். மனைவியும் அப்படித்தான். ஆனால் கணவரை பார்க்கும் போது மனைவி பரவாயில்லை. அவர்தான் கணவனின் கைகளை இறுகப்பற்றியிருந்தார். மற்றொரு கையில் ஒரு சிறிய பை இருந்தது. ரோட்டைக் கடக்கும் போது ரோட்டின் இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தார்கள். அவர்கள் ரோட்டை கடப்பதற்கு 15 வினாடி ஆகியது. அந்த சிறிய நேரத்திற்க்குகூட காத்திருந்து வழி விட பொறுமையற்று பைக்கில் ‘Z’ போட்டு (‘S’ மாதிரியல்ல) லாவகமாகக் கடந்து, வயதானவர்களை பயமுறுத்திச் சென்றார்கள் ஒரு இளம் தம்பதிகள் (தம்பதிகளா? என்றால் தெரியாது.ஆனால் மிகவும் நெருக்கமாய் அமர்ந்து, ஈருடல் ஓருடலாக அமர்ந்திருந்தார்கள்). ரோட்டைப் பாதி கடந்த வயதானவர்கள், திகைத்துப்போய் நின்றார்கள். அதைப் பார்த்தவுடன் “முட்டாள்” என்றேன் பைக்கில் சென்றவர்களை. மனதுக்கு எரிச்சலாயும் இருந்தது. ”மனிதர்கள் என்ன இயலாதவர்களுக்கு வழி கொடுக்க முடியாமல் இறுகியா போனார்கள்?” என்றேன், என் அருகிலிருந்த மனைவியிடம். “சரி..சும்மா இருங்க நீங்க” என்றார் என் மனைவி. ”நீங்க ஏன் கோபப்படுகிறீர்கள்? நீங்க கோபப்பட்டு எதாவது ஆகப்போகின்றதா?” என்பதே என் மனைவியின் வாதம்.

நாங்கள் பனகல் பார்க் சென்று இறங்கியவுடன், மனைவி,அங்கு இயர் பட்ஸ் (Cotton Ear Buds) விற்கும் 10 அல்லது 12 வயது குழந்தைகளைக் கண்டால் இரக்கப் பட்டு ஒரு பாக்ட் இயர் பட்ஸ் வாங்குவார்கள். இப்படி வாங்கியவைகளோ 42 பாக்கட் வீட்டில் இருக்கின்றது. ஆளுக்கு இரண்டு காதுகளையும், மகனுக்கு இரண்டு காதுகளையும், வைத்துக்கொண்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் காது குடைந்தாலும், எப்போதுதான் காலி செய்ய முடியும். அடிக்கடி காது குடைந்தாலும் நல்லதில்லையாமே. சரி என்ன செய்வது. யாருக்காவது கொடுக்கலாம் என்றால், இதையெல்லாம் கொடுப்பது சரிதானா எனவும் தெரியவில்லை. காலி செய்ய வழி தெரியாததால் இருந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிட்டோம். ஒவ்வொரு முறையும், பட்ஸ் வங்கியபின் “ஏன் இந்த மாதிரி சின்ன பிள்ளைகளை ரோட்டில் அலைய விடுகின்றார்ளோ” என்று கோபப்படுவார்கள். “அதான் நீயே சொல்வாயே கோபப்பட்டு ஒண்ணுமாகப்போவதில்லைனு. அப்ப ஏன் கோபப் படுகிறாய்?” என்று கேட்பேன். ”கோபப்படவில்லை. மனசு கஷ்டமாயிருக்கிறது.” என்பதே மனைவியின் பதில்.

வீட்டைவிட்டு வெளியே வந்து நடப்பவற்றை பார்த்தாலே, மனதுக்கு கஷ்டமான நிகழ்வுகள்தான் இருப்பதாய் தெரிகின்றது. படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடற்று ஒரே மாதிரியான நடத்தை உள்ளவர்களாய்த்தான் இருக்கின்றார்கள். அவற்றில் பல நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போவதால் வரும் இயலாமையால் தோன்றும் வக்கற்ற கோவம்தான் மிஞ்சும். ஆனால் இதற்கு மாறாக, மனதுக்கு நிறைவான, சமூகமாற்றத்தால் சந்தோஷப் படக்கூடிய நிகழ்வு ஒன்று நடந்தது.

சென்ற வாரம் பாண்டி பஜாருக்கு போகும்போது பனங்கல் பார்க் டிராபிக்கில் மிகவும் மொதுவாகச் சென்று கொண்டிருந்தோம். எங்களை கடந்து சென்ற ஸ்கூட்டியை (Scooty) பார்த்த என் மனைவி “அங்க பாருங்களேன்” என்று சொல்ல, நான் பார்ப்பதற்குள் எங்களைத் தாண்டி சென்றுவிட்டது ஸ்கூட்டி. அவர்கள் அந்த டிராபிக்கில் ரொம்ப தூரம் செல்லவில்லை. எங்களைவிட பத்தடி தூரம்தான் முன்னிருந்தார்கள். அவ்வளவே. ஆனாலும் எனக்கு அவர்களை ஒழுங்காக பார்க்க முடியவில்லை. பின் இருக்கையில் அமர்திருந்த பெண்ணின் புடவை நீல நிறம் என்பது மட்டுமே தெரிந்தது. என் மனைவியிடம் திரும்பி, “ஏன் அவர்களை பார்க்கச் சொன்னாய்? என்ன விஷேசம்?” என்றேன். முன்னே நின்ற வாகனம் நகர்ந்ததை காண்பித்து, “கொஞ்சம் போனால் நீங்களே பார்க்கலாம்” என்றார். நானும் அவர்கள் அருகில் சென்று பார்த்தேன். நீல நிற புடவை உடுத்தி பின் இருக்கையிலிருந்தவர், அதற்க்கு மேச்சாக நீல நிற பிளவுஸ் அணிந்திருந்தார். ஸ்கூட்டி வண்டியை ஓட்டியவர் நடுத்தர வயதுக்காரர், மா நிறம். முகத்தை சுத்தமாய் சவரம் (close shave) சொய்திருந்தார். சிரித்த முகம். சிவப்பு நிறத்தில் புடவையும், அதே நிறத்தில் பூ போட்ட பிளவுஸ்சும் அணிந்திருந்தார்.

ஆம்! அவர்கள் இருவரும் திருநங்கைகள்!!. ’அலி’ , ‘ஒம்போது’ என்று (தரங்கெட்ட) நம்மால் அழைக்கப்படும், நம்மைப்போன்ற மனித ஜென்மங்கள். எல்லா வாகனமும் நகரத் தொடங்கியதும், விருட் என்று அவர்களும் சென்றுவிட்டார்கள். ’அவள் போனான்’ என்றுதான் வார்தைகள் வந்தன. ‘அவள் போனான்’ என்றால் தப்பா? மொழியின் இலக்கணப் படி தப்பு. ஆனால்.. மெய் இலக்கணமாய் பார்த்தால் அது சரிதான். அவள் போனான். இலக்கண குற்றமா? இல்லை. குரோமசோம் குழறுபடியால் குற்றமானவர்களை, மனிதராக வாழவே மறுக்கப்பட்டவர்களை எப்படி அழைப்பது?. அவள் விரும்பும் பெண்மையை ஆமோதித்து. ‘அவள் போனாள்’ என்று திருத்தி அழைக்கவே என்னை பழக்கப்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன்.

திருநங்கைகளை, தெருக்களிலும் கடைகளிலும் பிச்சை எடுக்கவும், இழிநிலையில் இருத்தி பார்க்கவும்தான் நம் சமுதாயத்தால் இன்றளவும் முடிந்திருக்கின்றது. அதையெல்லாம் புறந்தள்ளி, முன்னேறி இரண்டு சக்கர வாகனம் ஓட்டிச்செல்லும் அந்த இரண்டு திருநங்கைகளை பார்த்தில் எனக்கும் என் மனைவிக்கும் சந்தோஷமாயிருந்தது.

சனி, 15 ஜனவரி, 2011

நகரும் கழிப்பறைகள்

என்னை பொறுத்தமட்டில் பள்ளிப் படிப்பு முடித்து ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டுச் செல்லும் வரை, எங்கள் ஊர், ஒரு மாநகரை ஒப்பிடுமளவுக்கு பெரிய ஊர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். வசதி வாய்ப்பை பார்த்தோமானால், கிராமம்தான். மக்கள் தொகை ஜாஸ்தியான கிராமம். விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு பக்கதிலிருக்கும் மம்சாபுரம் சென்று ஒரு வாரம் சொந்தக்காரங்க வீட்டில் தங்கியிருந்தேன். மம்சாபுரம் ஒரு வளமான கிராமம். ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், மம்சபுரத்திற்க்கும் மக்கள் தொகையைத் தவிர ஒரே ஒரு வித்தியாசம்தான். மம்சபுரத்தில் தண்ணீர் பஞ்சம் கிடையாது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தண்ணீர் கிடையாது. நானும் முத்துராஜும்தான் மம்சபுரத்தில் எல்லா இடமும் சுற்றுவோம். வயல் வெளி, வரப்பு, தோப்பு என்று இடம் விடாமல் திரிவோம். கிணற்றில் நீந்தி குளிப்பது என்பதே தனி சுகம்தான். தவளை நீச்சி, வாழமட்ட நீச்சி, சொருக்கு நீச்சி, முங்கு நீச்சி, கடப்பார நீச்சினு பல வகையான நீச்சல் வகைகள் உண்டு. எல்லா நீச்சல்களும் எல்லா பசங்களும் அடிக்கலாம், கடப்பார நீச்சைதவிர. ஊரிலேயே ஒரே ஒரு தாத்தாதான் அடிப்பாராம். அதுவும் அவருடைய இளமைக்காலங்களில், இப்போது இல்லையாம். மம்சபுரத்தில் நாட்கள் நகருவதே தெரியாது. அங்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான். ஆனால் ஒரோ ஒரு விசயம்தான் அசெளகரியமாய் இருக்கும். காலைக் கடனை முடிப்பதற்க்கு அரை கிலோமீட்டர் ஓடையை நோக்கி ஓடவேண்டும். அந்த அவசரத்தில், அரை கிலோமீட்டர் தூரம் என்பது ஐந்து கிலோமீட்டராய் தெரியும்.

எங்கள் பழைய வீட்டுக்கு இரண்டு வாசல்கள். தலைவாசல்தான் வீட்டிற்க்கான வழி. உள்ளே நுழைந்தால் முற்றவெளி, வலது பக்கம் படுக்கை அறையும், பெரிய ஹாலும், அதை ஒட்டி மாடிக்கு சொல்லும் படிகட்டும் இருக்கும். இடது பக்கம் ஒரு படுக்கை அறையும், டைனிங் ஹாலும், சமையலறையும் இருக்கும். அதையும் தாண்டி வந்தால் தாழ்வாரமும், தண்ணீர் தொட்டியும், கொஞ்ச தூர இடைவெளியில் மாட்டுத்தொழுவத்தைக் காணலாம். தொழுவத்தை அடுத்து கழிப்பறை, முற்றவெளியிலிருந்து இருநூறு அடி தூரத்தில் இருந்தது. நாங்கள் சின்ன பசங்களாக இருக்கும்போது, இரவில் கழிப்பறைக்குப் போக பெரியவர்களை துணைக்கு கூட்டிச் செல்வோம்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் பழைய வீட்டுக்கு எதிரே இருந்த காலிமனையில் வீடுகட்டி சென்றோம். புதுவீடு, அளவில் சின்னது. ஒவ்வொரு அறைகளும் அடுத்தடுத்து இருக்கும். ஹால், படுக்கைஅறை, சமையலறையும் அதையடுத்து மாடிக்கு செல்லும் படிக்கட்டும் இருக்கும். படிக்கட்டுக்குப் பக்கத்தில் குளியலறையும், கழிப்பறையும் கட்டப்பட்டிருக்கும். கழிப்பறை, ஹாலிருந்து ஐம்பது அடி தூரந்தான். இரவில் போகவேண்டுமொன்றாலும் தனியாகப் போகலாம்.

வேலை நிமித்தம், ஊர் ஊர்ராய் சுற்றி, கடைசியில் சென்னையில் அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட் வாங்கி குடியேறினோம். மொத்தம் இருபத்தி நான்கு பிளாட்கள். வீட்டில் ஒரு சிறிய ஹால், இரண்டு படுக்கையறைகள், சமையலறை, பால்கனி என்பதுதான் அமைப்பு. இரண்டு படுக்கையறைகளுக்கு நடுவில் ஒரு குளியலறையும், கழிப்பறையும், பிரதான படுக்கையறையில் ஒரு குளியலறையும், கழிப்பறையும் இருக்கும்.

நான் மம்சாபுரத்தில் சுற்றித்திரிந்த நாட்களுக்கும், இப்போது சென்னையில் இருக்கும் நாட்களுக்கும் இடைப்பட்ட காலம், இருபத்தி ஐந்து ஆண்டுகள். இந்த காலத்தில் கழிப்பறைகளும் ஆயிரத்தி ஐநூரு அடி தூரம் நகர்துள்ளன. ஆமா....மம்சாபுரத்தில் அரைகிலோ மீட்டர் அதாவது சுமார் ஆயிரத்தி ஐனூரு அடி தூரத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பழய வீட்டில் இருநூறு அடி தூரத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய வீட்டில் ஐம்பது அடி தூரத்திலும் இருந்த கழிப்பறைகள், சென்னை பிளாட்டில் படுக்கையறைக்குள் நகர்ந்து வந்துவிட்டன.

நாகரீக வளர்ச்சியில் மனிதன் மட்டுமல்ல, கழிப்பறைகளும் நகர்கின்றன !.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

ஒரு புளியமரத்தின் கதை


நான் படித்த சி.எம்.எஸ். உயர்நிலை பள்ளியில், வகுப்பறைகள் அருகருகே மூன்று இடங்களில் இருக்கும். அதில் ஒன்று, பங்களா வகுப்புகள். ஆங்கிலேய துரையின் வீடு – பங்களாவாக இருந்த இடம்தான் வகுப்பறைகளாக மாறிப்போயிருந்தது. அங்கிருந்து, மெயின் பள்ளிக்கு, கான்வெண்ட் அருகில் செல்லும் ரோடுவழியாகவோ அல்லது விளையாட்டு மைதானம் வழியாகவோ செல்லலாம். ஆறாம் வகுப்பில் நான்கு செக்‌ஷன்களும், ஏழாம் வகுப்பில் இரண்டு செக்‌ஷன்களும், எட்டாம் வகுப்பு ஒன்றே ஒன்றும் அங்கு இருந்தன. எட்டாம் வகுப்பு ’டெப்போ கிளாஸ்’ – அதாவது புத்தகம் நோட்டு வழங்கும் ’டெப்போ’ உடன் இணைந்த வகுப்பறை. ’டி’ செக்‌ஷன். எப்போதும் புது புத்தகத்தின் மணம் வகுப்பறை முழுவதும் இருக்கும். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ரொம்பவும் பெருமையாயிருக்கும். நோட்டு புத்தகங்களை கொடுப்பதெல்லம் அந்த வகுப்பு மாணவர்கள்தாம். நானும் அந்த வகுப்பில்தான் படித்தேன். ஜன்னலுக்கு வெளியே புத்தகம் வாங்க வரும் மாணவர்களிடமிருந்து ரசீதை வாங்கி, சாரிடம் கொடுப்போம். சார் அதை பார்த்து, ரெஜிஸ்டரில் குறித்துக்கொண்டு, என்னென்ன நோட்டு புத்தகங்கள் கொடுக்க வேண்டுமென்பார். அங்கு வைத்திருக்கும் புத்தகதிலிதிருந்து ’செட்’ ’ செட்’ டாக எடுத்து கொடுப்போம்.

டெப்போ வகுப்பு, அளவில் மற்றைய வகுப்பறைகளைவிட பெரியது. ஜிலு ஜிலுனு நல்ல காற்று வரும். பங்களா வகுப்புகள் அனைத்துமே காற்றோட்டமாயிருக்கும். நிறைய மரங்கள். ஆங்கிலேயார்கள் வைத்தது. வேப்ப மரம், புளிய மரங்கள்தான் ஜாஸ்தி. சில தென்னை மரங்கள். நாங்கள், விளையாடுவது புளிய மரத்தின் கீழ்தான். புளியமரத்தின் காய், பழத்தை கல்லால் அடித்து, எடுத்து சாப்பிடலாம், புளியஇலை கொழுந்தையும் சாப்பிடலாம். மேலும், புளியமரக் கிளையை பிடித்து தொங்கி விளையாடினாலும் ஒடியாது. அதனால், எல்லா புளியமரத்தின் கீழும் பசங்க கூட்டமிருக்கும்.

பள்ளி நாட்களில், புளியமரத்தில் மேல் இருந்த ஈர்ப்பு கூட என்னை, சுந்தர ராமசாமியின் “புளியமரத்தின் கதை” நாவலை படிக்கத் தூண்டிய விஷயமாயிருக்கலாம்.

புளியமரத்தின் கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் சமகால நிகாழ்வாய்தான் தோன்றுகின்றன. படிக்கும் போது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாய் தெரியவில்லை, ஒருசில சம்பவ விபரிப்பைத் தவிர. நாவலின் நகர்வு, மையக்கருத்தை நோக்கியே இருக்கும் என்ற வரைமுறைக்கு உட்படவில்லை. கதை நேர் கோட்டில் நகர்கின்றது. உடன் வருவது புளியமரம்தான். அதுவும் கதையின் நாயகன் இல்லை. நகரின் வளர்ச்சியும் புளியமரத்தோடு பின்னப்பட்டு நகர்கின்றது.கதை புளியமரத்தில் ஆரம்பிக்கின்றது. கதையோடு பயணிக்கின்றது. இறுதியில், புளியமரம் இறந்தே விடுகின்றது. கொலை செய்யப்படுகின்றது. இடைப்பட்டதில் மனிதர்கள். நாகர்கோவிலில் இன்று உள்ள வேப்பமூடு ஜங்ஷன்தான் கதையில் வரும் புளியமர ஜங்ஷனாக தோன்றுகின்றது.

கதையில் வரும் பாத்திரங்களின் சித்தரிப்பு அவர்களின் குணாதிசியங்களை யதார்த்தமாய் சொல்வதாயும், சூழ்ச்சி, பொறாமை, சுயநலம் போன்ற குண வொளிப்பாடுகளை சித்தரிக்கும் நிகழ்வுகளும் நையாண்டியாக சொல்லபட்டிருக்கின்றது. ஒவ்வொரு மனிதரும் ஜாதீய அடைமொழியிட்டு புனையப்படுவது தேவையில்லாததாயும் தவிற்கப்பட்டிருக்கக் கூடியதாயும் தோன்றுகின்றது. வாழ்க்கையிலும், சமுதாயச் சூழலிலும் கடைநிலையிலிருக்கும் நகராட்சியின் துப்புரவு தொழிலாளர்களை ‘தோட்டி’ ,’தோட்டிச்சி’ என்று விளிப்பதும், அவர்கள் புளியம் பழத்தை கல்லெறிந்து எடுத்து செல்வதாய் புனையப்பட்டதும், தரம் குறைந்த ரசனைக்குத்தான் இட்டுசெல்லுகின்றது. இந்த கதை பெரும்பாலான மனிதர்களின் வீழ்ச்சியையே விவரிக்கின்றது. இரண்டு வியபாரிகளிடையே நடக்கும் போட்டியே புளியமரத்தின் மரணத்திற்க்கு காரணமாகிறது. அதற்க்குமுன், புளியமரதின் உயிரை காப்பாற்றிய தாமோதர ஆசான் சொல்லும் கதையிலிருந்து புளியமரத்தை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் ஆசானைப் பற்றித்தான் தெரிந்துகொள்ள முடியவில்லை. கதையை நகர்த்திவிட்டு அவரும் கதையைவிட்டு நகன்றுவிடுகிறார். ஆசான் கதைசொல்லும் போது, மண் மணம் கமழும் வார்த்தைகள் தெறித்துச் சிதறுகின்றன.

”எதையேனும் ஒன்றை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடுவது என்பது எப்பொதும் புத்திசாலித்தனமான காரியம்தானே? இழப்பதற்க்குப் பல்லிக்கு வாலும், பொண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும், கடவுளுக்கு முகமுடியும் உண்டு”

எனற வரிகள் மூலம், சுந்தர ராமசாமி தத்துவவாதியாகிறார். மேலும், புதுப்பிக்கப் பட்ட ஊர் பூங்காவில் மாலை வேளைகளில் ஒன்றுகூடும் பென்ஷன் வாங்கும் வயோதிகர்களைப் பற்றி கூறும் போது

”.....தற்போதைய அனுபவ அறிவோடு பாலியம் திரும்பி வாழ்க்கை ஆரம்பித்தால் அது எவ்வளவு மகோன்னதமாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கின்றார்கள். மகத்தான தோல்விகளை மறைக்க, அற்ப வெற்றிகளைப் பறையடித்துக் கொள்ளும் பலஹீனம் பரஸ்பரம் அம்பலமாகி, வெட்ட வெளிச்சமாகிவிடுகிறபொழுது ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துகொள்ளவே வெக்கமாயிருக்கிறது அவர்களுக்கு......”

என்கிறார். இது வயதானவர்களை பற்றிய கிண்டலாக அல்லாமல், சமுதாயத்தில் எல்லா மட்டங்களிலும் நடப்பவைகளை பகடி செய்வதாய்த்தான் தெரிகின்றது.

நியாயம் தர்மம் என்று தம்படம் அடிப்போரை சுரா,

”......கீதையும் குறளும் மாறிமாறிக் காதில் விழும் வேளைகளிலேயே, அவற்றைக் கையிலேந்திக் கொண்டிருக்கும் பெரியோர்கள் தக்க தருணங்களில் அவற்றை ரகசியமாக மீறிய நடைமுறைச் சாமர்த்தியத்தில்தான் அவர்களுடைய வெற்றிகளின் ரகசியம் புதையுண்டு கிடக்கிறது.......” எனறு எள்ளுகின்றார்.

காதர் என்ற பையன் கோபால ஐய்யரின் கடையின் வேலைக்காரனாய் சேர்ந்து, படிப் படியாக வளர்ச்சியடைந்து வியாபாரியானதும், தாமு என்ற வியாபாரியின் போட்டியில் தோற்ப்பதும் நுணுக்கமாய் சொல்லப்பட்டிருக்கின்றது. தோல்வியில் துவண்டு போன காதரை, பத்திரிக்கை நிருபர் இசக்கியின் தவறான வழிகாட்டுதல் முனிசிபாலிட்டி தேர்தலில் போட்டியிடவைத்து முற்றிலும் அழிவுக்கு இட்டுச் செல்லுவது நேர்த்தியாக புனையப்ட்டிருக்கின்றது. கதையில் வரும் ஆசாரிபள்ளம் ரோடு, மீனாட்சிபுரம், வடசேரி, சுசீந்திரம் இடங்களுக்கெல்லாம் நம்மை கூட்டிச் செல்லுகிறார் கதை ஆசிரியர்.

தாமோதர ஆசான், காதர், தாமு என்று வரும் முக்கிய கதை மாந்தர்கள் எல்லோருமே வைப்பாட்டி வைத்திருக்கிறார்கள், வேறு பெண்களையும் நாடுகிறார்கள். தாமுவும் அவர் சகோதரரும் ஒரே மனைவியை வைத்திருக்கின்றார்கள். பெண்களுக்கென பாத்திரம் கதையில் இல்லாவிட்டலும், அவர்கள் போகப்பொருளாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றார்கள். கதா பாத்திரம் மேசமானவன் எனக்காட்ட பெண் தொடர்பு குணாதிசயத்தை காட்டவேண்டிய அவசியம் கதைக்கும் இல்லை, பெண்களை கேவலப் படுத்திதான், ஆண் பாத்திரங்களை கொட்டவனாக வகை படுத்துதல் என்பது நல்ல சித்தரிப்பும் இல்லை.


புத்தகத்தின் தலைப்பு : ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர் : சுந்தர ராமசாமி
வெளியீட்டாளர் : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

திங்கள், 3 ஜனவரி, 2011

புகார்

திருடு போய்விட்டது
என்று புகார் செய்தார்

திருடப்பட்டது
இதயமென்றார்

காதலிக்கும்போது
காணாமல் போனதென்றார்

திருடியது யாரென்று நன்றாய்
தெரியுமென்றார்

அவளை சிறைபிடிக்க
வேண்டுமென்றார்

சிறைபிடித்து அவள் இதயத்தில்
சிறைப்பட வேண்டுமென்றார்.

புதன், 22 டிசம்பர், 2010

ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜானார்

“ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம்: சி.பி.ஐ, விசாரணையை நேரடியாக கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு (தினமலர், டிசம்பர் 16, 2010)”

இதைப் படித்த உடனே எனக்கு சந்தோசம். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகள் பிரச்சினையை உச்சநீதிமன்றம் எப்படி கிடுக்கி பிடிபோட்டு இறுக்குகின்றது?. இந்த உத்தரவை போட்ட நீதிபதி, நமது நாட்டைக் காக்க வந்த கடவுள் மாதிரியேதான் தெரிந்தார். ஏன், உச்சநீதிமன்றமே ஒரு கோவிலாகத்தான் தெரிந்தது. எனக்கு ஊழல் இல்லா சமுதாயத்தில் வாழத்தான் பிடிக்கும். அதானால்தான் சந்தோசம். சரி இதை யாரிடமாவது பகிர்ந்து கொண்டு, அவர்களையும் மகிழ்விக்கலாமே என்று நினைத்து, ராஜப்பாவுக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு, ஹா ...ஹானு வாய்விட்டு சிரித்தார். எனக்கு அவர் சிரிப்பதின் அர்த்தம் புரியவில்லை.

“ஏன்?”னு கேட்டேன்.

“நீ சொன்ன செய்தியையும் உன்னையும் நினைத்துத்தான்”

“புரியலயே”னு சொன்னேன்.

”புரியும்படி சொல்றேன்”.

”சரி”

“ உச்சநீதிமன்றமே ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன்னை ஒரு கண்காணிக்கும் நிறுவனமாய்
பிரகடனப்படுத்திக் கொண்ட உத்தரவுதானே உன் சந்தோசத்திற்கு காரணம்?.”

“ஆம்”

”சரிதான். நீதிபதிகள் அனைவரும் கங்காணியாகிவிட்டர்கள்”

“என்ன சொல்றீங்க”

“நீதிபதிகள், சி.பி.ஐ.யின் வேலையை கண்காணித்தால், நீதிமன்ற வேலையை யார்
பார்ப்பது?”

”???”

“இந்திய நீதிமன்றங்களில் 30000000 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒரு வழக்கில் குறைந்தது இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருந்தாலும், 60000000 பேர் காத்திருகின்றார்கள். அதுவும் வருடக்கணக்கில். எவ்வளவு காலவிரையம். ஐந்து வருடங்களுக்கு மேல் விசாரணைக் கைதியாக லட்சக்கணக்கானோர் சிறைசாலைகளில். வழக்கு துவங்கப்படாமலோ, வழக்கு மந்தமான முன்னேறத்தாலோ, வாழ்வை தொலைத்துவிட்டு சிறையில். அதில் நிறையபேர் நிரபராதியாகக்கூட இருக்கலாம். இந்த தாமதத்தை யார் கண்காணிப்பது?”

”நீங்க சொல்லுவது சரிதான்”

“இதுக்குத்தான், கிராமத்தில் அவங்க துருத்தியை அவங்க அவங்க ஊதணும்னு சொல்லுவாங்க”

”துருத்தினா?” னு கேட்டதற்கு பதிலே சொல்லாமல், ராஜப்பா தொடர்ந்தார்.

“சில மாதங்களுக்கு முன்பு வெளியான போபால் விஷவாய்வு தீர்ப்பு வந்தபோது, நாடு முழுவதும் ஒரே களேபரம். பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி இல்லை. இறந்து போன 20000 பற்றியுமல்ல. உயிர் பிழைத்தவர்கள் இன்றுவரை படும் அவதியை பற்றியுமல்ல. கண்பார்வை போனவர்களைப் பற்றியோ ஊனமுற்றவர்களைப் பற்றியோ அல்ல. அப்ப ஏன் களேபரம்?. சம்பவம் நடந்த போது, யூனியன் கார்பைடு கம்பெனியின் நிர்வாகி ஆண்டர்சனை தப்பவிட்டது யார்? ராஜீவ் காந்தியா? அர்ஜுன் சிங்கா?”

”ஆம் அப்படித்தான் நடந்தது”

“25 ஆண்டுகள் கழித்து கிடைத்த தீர்ப்பில் தப்பியது நீதிதான். கிடைக்காமல் போனது நீதிதான். இதை யார் கண்காணிப்பது.?”

”ம்”

”சென்ற ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தை, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று கேட்டார்கள். ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் அப்படிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிடவில்லை. சி.பி.ஐ. விசாரணைக்கு போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?”

”தெரியவில்லையே”

” ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜாயிருப்பார்”

“ஒண்ணுமே புரியவில்லையே”

”அப்படி நடந்திருந்தால் நீதிபதிகள் சி.பி.ஐ. வேலையை கண்காணித்திருப்பர்கள். நீதிபதிகள்தாம் சி.பி.ஐ.யின் வேலையை கண்காணிப்பார்களேனு, சி.பி.ஐ.ல உள்ளவர்கள் ரயிலைத்தான் ஒழுங்கா ஒட்டுவதற்கு ஆள் இல்லைனு, ரயில் ஒட்ட சென்றிருப்பார்கள். ரயில் ஓட்டத்தான் சி.பி.ஐ. ஆபிசர்கள் வந்துவிட்டார்களேனு. ரயில் ஒட்டுனர்கள் உட்கார்ந்து யோசித்ததில், ஆளில்லா லெவல் கிராசிங்கில் குறுக்கே வந்த ஜட்கா வண்டிதான் விபத்துக்கு காரணம்னு புரிந்துபோயிருக்கும். ஜட்கா வண்டியை ஒழுங்கா ஓட்டினால், விபத்தே நடந்திருக்காதுனு தெரிந்து, ரயில் ஒட்டுனர்கள், ஜட்கா வண்டி ஓட்டப் போயிருப்பார்கள். ஜட்கா வண்டிக்காரருக்கு என்ன செய்யனு தொரியாம, சரி நீதிபதி வேலைதான் ஆளில்லாமல் சும்மாயிருக்குனு - ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜாயிருப்பார்.”

“!!!”




(குறிப்பு:

‘துருத்தி’ என்பது ஆட்டுத் தோலினால் ஆன ஓர் ஊது இயந்திரம். இரும்புக் கொல்லரிடம், உலேகத்தை சூடாக்க உபயேகிக்கப்படும். ‘உன் துருத்தியை ஊது’ என்றால் ‘உன் வேலையை பார்’ என்பது)

சனி, 18 டிசம்பர், 2010

காண் என்றது இயற்கை

எனக்கு எட்டாம் வகுப்பு முழுஆண்டு தேர்வு முடிந்திருந்த நேரம். கட்டிப்போட்டிருந்த வெள்ளாட்டாங்குட்டியை அவிழ்த்துவிட்டால் அங்கும் இங்கும் குதித்தாடுமே அதேமாதிரி இரண்டு வாரங்கள் தெருவில் விளையாடினோம். அதன்பின்னர் ஒரு நாள் விளையாட நாங்கள் படித்துக்கொண்டிருந்த சி.எம்.எஸ். பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்திற்க்கு சென்றோம். அங்கிருந்து பார்த்ததில் மலையும் வனமும் அன்று வியப்பாய் தெரிந்து எனக்கு. மலை என்னைவாஎன்று என்னை அழைப்பது போல் இருந்து. ‘செண்பக தோப்புக்கு போகலாமாடா?’னு உடனிருந்த நண்பர்களிடம் கேட்டேன். எல்லோரும்சரிஎன்றார்கள். ‘யாருக்காவது வழி தெரியுமா?’. நாராயணன் தெரியும்னு சொன்னான். எங்கள் ஆறுபேரில் அவன் மட்டுமே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய, எங்களைவிட மூத்தவன். அங்கிருந்து மேற்கே செல்லும் மண் சாலை வழியே நடக்க ஆரம்பித்தோம். நடக்க நடக்க வனமும் மலையும் அருகில் வந்தன. செண்பக தோப்பில், மரமும், செடியும், கற்களும், பாறைகளும், மலையும் மௌனமாய் ஆனால் வசீகரமாய் என் முன்னே நிற்பதை உணர்ந்தேன். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. பசியறியாது வனத்தில் உலவியதில் நேரம் போனதே தெரியவில்லை யாருக்கும். அந்த வழியே வந்த ஒரு பெரியவர், எங்களை பார்த்துடேய் சாயங்காலமாயிருச்சி........வீட்டுக்கு போங்கஎன்று சொன்னார். நேரமானால் காட்டு விலங்குகளெல்லாம் வருமுனு உண்மையைச் சொல்லி பயமூட்டினார். எனக்குத்தான் அங்கிருந்து வரவே பிடிக்கவில்லை. வனமும் மலையும் சினேகமாயிருந்தன. வீட்டிற்க்கு கூட்டிக்கொண்டு வந்துவிட தேன்றியது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்து, மேற்படிப்பிற்க்காக வெளியூருக்கு செல்லும்வரை பல தடவைகள் அங்கு சென்றிருக்கின்றேன். காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு விடுமுறைகளில் செண்பக தோப்பிற்க்கு சென்று மலையோடு மௌனமாய் பேசிய நாட்கள் பல. கல்லூரி நாட்களில் மூன்று நான்கு முறைதான் செல்ல முடிந்தது. அந்த குறைந்த வாய்ப்புகளும், நண்பர்களும் அதற்கு பின் கிடைக்கவில்லை. ஆனால் வனத்தையும் மலையையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்து கொண்டிருந்தது.

நேற்று மலையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும், மிக அருகில் சென்று பார்க்க முடிந்தது. ஆம், என்னை எஸ். ராமகிருஷ்ணன்தான் அழைத்து சென்றார். என் கைகளை இறுக பற்றியே நடந்து சென்றது மாதிரி ஓர் உணர்வு. அப்போது அவரின் மனம் மலையை தின்பதற்கு ஆசைப்பட்டதையும் காண முடிந்தது. என் மன உணர்வுகளையும், மலையின் மௌனத்தையும் வார்த்தைகளில் ‘மலை தோன்றுகிறது’ கட்டுரையில் கொட்டிவிட்டு சென்றார்.

சிறுவயதில், எனக்கு பள்ளித் தேர்வு விடுமுறைகளில் மட்டுமல்லாது, பிற நாட்களிலும் மற்றுமொரு மனமொத்த பொழுதுபோக்கு, செடிகள் வளர்ப்பது. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் எல்லாவகையான காய்கறிச் செடிகளையும் நானும் எனது தம்பிகளும் வளர்ப்போம். அதிலும் எனக்கு, கொத்தமல்லிச் செடி வளர்க்க ரொம்பப் பிடிக்கும். அது விதைத்ததிலிருந்து வேகமாய் வளரக்கூடிய செடி. தோட்டத்தில் மண்ணைத்தோண்டி, கிளறி விட்டு, மல்லி விதையை விதைத்து தண்ணீர் ஊற்றி, அது முளைவிடும் வரை மண்ணை பார்த்துக் கொண்டிருப்பேன். துளிர்விடும் முதல் இலையிலிருந்து ஒவ்வொரு இலையும் பரிட்சயமாகிவிடும். ஒருநாள், காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்முன் பார்த்த, நன்கு வளர்ந்த மல்லிச் செடி, காணாமல் போய் மதிய உணவில் துவையலாய் வந்து உக்காரும். கொத்தமல்லி துவையலை சாப்பிடப் பிடிக்காமல் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு, ரசச்சோற்றை சாப்பிட்டுவிட்டுச் செல்வேன். நான் செடிகளிடம் உரையாடிய நிகழ்ச்சிகளையும் உறவாடிய நாட்களையும் இப்போது நினைத்தாலும் சிறுபிள்ளையின் விளையாட்டு என்று புறந்தள்ள முடியவில்லை. ராமகிருஷ்ணனின் ‘சிறு செடி’ கட்டுரை, கொண்டாடிய நாட்களை நினைவுக்கு கொண்டுவருகின்றது.

தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் போது யானையின் மணிச் சத்தம் கேட்டால், எந்த விளையாட்டாயிருந்தாலும் அப்படியே கைவிட்டுவிட்டு ஓடிவிடுவோம். அது ஆண்டாள் கோவில் யானை ‘கணேசா’னு ஊரிலுள்ள எல்லா பசங்களுக்கும் தெரியும். அதற்கு பின்னால், பத்து பதினைந்து பசங்க ஓ.....ஓனு ஊளையிட்டுக்கொண்டே ஓடிவருவார்கள். அவர்களுடன், நாங்களும் இணைந்து கொள்ளுவோம். இது, அந்த கால கிரேக்க ஒலிம்பிக்ஸ் மாதிரிதான் – ஆண்களுக்கு மட்டுமேயானது. யானையை கோயில் கொண்டு சேர்க்கும் போது மொத்தம், எப்படியும் இருபது முப்பது பசங்களாவது தேறுவோம். இப்போதும்கூட, யானையை கண்டால், நின்று பார்க்காமல் கடந்து செல்ல முடியாது. அது யானை ‘கணேசா’வாக இருந்தாலென்ன? அல்லது கல் யானையாயிருந்தாலென்ன? அதன் வசீகரம் அப்படி. ’யானை பார்த்தல்’ கட்டுரையும் நம்மை வசியம் செய்துவிடுகின்றது.

’மழையில் நனையாதே....காய்ச்சல் வந்திரும்’ னு சொல்லாத அம்மாக்களும் இருந்ததில்லை, கேட்கப்படாத குழந்தைகளும் இருந்ததில்லை நம்மூரில். ஆனால் குழந்தைகளுக்கு ’மழை என்ன செய்யும்?’ என்ற கேள்விதான் தொக்கிநிற்கும் மனதில். மழை, நம் வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் வித விதமான அனுபவத்தைத்தான் பொழிந்திருக்கின்றது. மழை பற்றி மூன்று கட்டுரைகளும் இப்படித்தான். கண்முன் மழையை நிறுத்திவிடுகின்றார். நாமும் நனைந்து விடுகின்றோம்.

நாம் குற்றாலத்தின் பாறைகளில் சத்தமிடும் அருவிகளை பார்த்து அனுபவித்திற்கின்றோம். பாறைகளில் சத்தமிடாமல் வழியும் வெயிலை நமக்கு காண்பிக்கின்றார் ராமகிருஷ்ணன். சத்தத்தில் குளித்துப்பழகிய நமக்கு நிசப்த்தத்தில் குளிப்பதும் சுகமாய்த்தான் இருக்கின்றது. வெறுமையும் இருப்புதானே.


வெயிலில் அலைந்து திரிந்து கிறங்கிய ராமகிருஷ்ணனும் அவரது நண்பரின் முகத்தை கண்டு முன்பின் தெரியாத பெண்ணின் ’சாப்பிட்டுட்டு போறீங்களா சார்’ என்ற உபசரிப்பு, ஒரு கிராமத்தின் பிம்பத்தை ‘மைனா அலையும் பகல்’ கட்டுரையில் கிடைக்கச்செய்கின்றார்.

ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கும்போதும் என்னுடைய பழைய நினைவுகளைக் கிளறி விடுகிறது. என்னுடன் தெரு புளுதியில் உருண்ட மழையில் நனைந்த என் இளம் வயது பையனாய் ராமகிருஷ்ணன் இருப்பதை உணர்வுபூர்வமாய் உணர்ந்தேன்.

ராமகிருஷ்ணனின் ‘காண் என்றது இயற்கை’ நூல் இரண்டு பிரிவுகளை கொண்டது. முதல் பிரிவு, ’இயற்கை அறிதல்’. அதன் வாசிப்பில் கிடைத்த அனுபவங்கள்தான் மேலே சொன்னது. ஒவ்வொரு கட்டுரையும் என்னுடைய சிறு பிராயத்தின் நிகழ்வுகளை என் உடனிருந்து எந்தன் அனுவபத்தை பங்கிட்டு கொண்ட நண்பனின் நுண்ணிய பகிர்வாய்த்தான் உண்ர்ந்தேன்.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து என்னுடைய அம்மா ஆனந்த விகடன், குமுதம், கல்கி வாரப்பத்திரிகைகளை படித்துக் கொண்டுருந்தார்கள். அதில் வரும் தொடர் கதைகளை கிழித்தெடுத்து பையிண்டு செய்து புத்தகமாய் உருவாக்கிவிடுவார்கள். சாண்டில்யனிலிருந்து,தேவன், …போன்றோர்களின் கதைகளை அப்படித்தான் வாசித்துக் கொண்டிருந்தோம். இந்த Home Made Booksல் கதை படிப்பதில் மற்றுமொரு பயனுமுண்டு. பிரதான கதையுடன் சேர்த்து ஆங்காங்கே ஜோக்குகளும் சுவாரசியமான கட்டுரைகளும் படிக்க கிடைக்கும். அது மாதிரிதான், ‘காண் என்றது இயற்கை’ நூலின் இரண்டாவது பிரிவு – அனுபவம்.

’மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ என்று நமது உடல் நலனை சோதிக்க பெருநகர மருத்துவ மனைகளில் வசதிகள் இருக்கின்றன. வருடத்திற்கு ஒருமுறை சென்று சோதித்துக் கொள்ளலாம். மனநலனை சோதிக்க ஏதாவது வழி இருக்கின்றதா?. இருக்கின்றது. ராமகிருஷ்ணனின் அனுபவத்தில் வரும் ‘எலிக்கடி’ யை படித்துவிட்டு வாய்விட்டு தொடர்ந்து சிரித்தீர்கள் என்றால், நீங்கள் நல்ல மனநலனோடு இருக்கின்றீர்கள் என்பது நிச்சயம். இதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை படித்துபார்த்து........சிரித்து...சோதித்துக்கொள்ளவது நலம்.



புத்தகத்தின் தலைப்பு : காண் என்றது இயற்கை
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீட்டளர் : உயிர்மை பதிப்பகம், சென்னை.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

மோசடி என்றொரு மோசடி

இரண்டாம் தலைமுறை அலைபேசி மோசடி (2G Spectrum Scam) பற்றிய செய்திகளை படித்தவுடன் எனக்கு, “உண்மையான் உண்மை”, “பொய்யான உண்மை”, “பொய்யான பொய்”, “உண்மையான பொய்” பற்றிய நினைவுகள்தான் வந்தது. அத்துடன் பத்திரிக்கையில் படித்த மேலும் ஒரு காமெடியும் கூடவே நினைவுக்கு வந்தது.

’அப்பா கோரிப்பாளையத்திலிருந்து நம்ம வீட்டிற்க்கு பஸ்ஸில் வந்தால் டிக்கட் எவ்வளவு?”

”நாலு ரூபாய்” என்றார் அப்பா.

“அப்ப நான் நாலு ரூபா சேமித்துவிட்டேன்”

“எப்படி?” அப்பா

“நான் பஸ்ஸில் வருவதற்க்கு பதில், பஸ்ஸுக்கு பின்னால் ஒடி வந்தேன்”

ஒரு வினாடி சந்தோசப்பட்ட அப்பா, “அட போடா முட்டா பையலே, நீ பஸ்ஸுக்கு
பின்னால் ஓடி வந்தற்க்கு பதில் டாக்ஸிக்கு பின்னால் ஒடி வந்திருந்தால் நாற்பது ரூபாய் சேமித்திருகாலாமே” என்றார்.

மகன் சேமித்ததாய் சொன்ன நாலு ரூபாயும் சரி, அப்பா சேமிக்கச்சொன்ன நாற்பது ரூபாயும் சரி, இவை யாவுமே கருத்தியல் (notional) சேமிப்பே தவிர உண்மையானது அல்ல.


இதைப்போலத்தான் இரண்டாம் தலைமுறை அலைபேசி மோசடியும் உள்ளது. எல்லோரும் சொல்லுகின்ற அரசங்கத்திற்க்கு உண்டான இழப்பும், டாக்சிக்கு பின்னால் ஒடி சேமித்தமாதிரிதான். இந்த கருத்தியல் இழப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். எண்களில் சொன்னால் – 150000,00,00,000 ரூபாய். இந்த கணக்கில் இரண்டுவகையான முட்டாள்களும் ஒரே மாதிரியான பாட்டைத்தான் பாடுகின்றார்கள். படித்த முட்டாள், பாடிக்காத முட்டாள் என்ற இரண்டு வகை சரிதானே?. உரிமைத் தொகையாக (license fee) அரசங்கம் இழந்த தொகைதான் இவ்வளவு பெரிய பணம் என்கின்றார்கள். இந்த இழப்பிற்க்கு மொத்த பொறுப்பாளியாக மத்திய அரசின் முன்னாள் தகவல் தொடர்பு மந்திரி அ. ராசா என்று சொல்லுகின்றார்கள். ஆரம்பத்தில் வருமான இழப்பு என்று ஆரம்பித்து, பின்னர் அ. ராசாதான் கையூட்டாக இவ்வளவு தொகையையும் பெற்றமாதிரி ஒரு மாயை உண்டாக்க முயற்சி சொயப்படுகின்றது. (என்னை அ. ராசாவின் அனுதாபியாகவோ அல்லது தி.மு.க வின் தொண்டனாகவோ நினைக்கவேண்டாம். பிரச்சினையை எப்படி சமுதாயம் பொதுவெளியில் அலசுகின்றார்கள் என்றே நோக்குகின்றேன்)

வ்ருமான இழப்பிலிருந்து, கையூட்டமாய் மாறிய இந்த அறிவுஜீவிகளால் நடத்தப்படும் நாடகம், அடுத்த கட்டத்திற்க்கு நகர்கின்றது. அதற்கு பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் தகுந்த சூழமைப்பை உருவாக்கித்தருகின்றன. இவ்வளவு பெரிய தொகையை எங்கு பதுக்கி வைத்திருக்கின்றார்கள்? யார்யாரெல்லம் பணத்தை பங்கு போட்டர்கள்?, கருணாநிதியா? கனிமொழியா?, அதற்கு CBI யா விசாரணையா அல்லது JPC கூட்டு விசாராணையா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றார்கள். அதற்காக, இந்த மாதிரியான தொலைதொடர்பு வர்த்தக உரிமையில் ஊழலே நடக்க வாய்ப்பில்லையா? என்றால், யாரும் மறுப்பதற்க்கில்லை. ஆனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கான மோசடி என்று ஒரு பொய்யான பொய்யை பிடித்துக்கொண்டு, மேலும் பயணிக்க வேண்டாம். இப்படி பயணப்படும்போது உண்மையான உண்மைகள் மறைக்கப்படுகின்றன அல்லது நம் கவனத்தை திசை
திருப்பிவிடுகின்றன. அப்படி திசை திருப்பப்பட்ட உண்மைகளில் ஒன்று.....

நமது நாட்டில் அலைபேசி அழைப்பு கட்டணமாய் ஒரு வினாடிக்கு ஒரு பைசா அல்லது ஒரு நிமிடத்திற்க்கு 50 பைசாவாக உள்ளது. இதேமாதிரியான சேவை, அமெரிக்காவில் நிமிடத்திற்க்கு 1100 பைசாவாகவும், இங்கிலாந்தில் நிமிடத்திற்க்கு 900 பைசாவாகவும் உள்ளது. அதாவது இந்தியாவில் நமக்கு கிடைக்கும் சேவை 1500 விழுக்கடு முதல் 2200 விழுக்காடுவரை மலிவாக இருக்கின்றது. தரத்திலோ தொழில்நுட்பத்திலோ குறைந்தது என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உலகத் தரம்வாய்ந்த தொழில்நுட்பம்தான் இங்கும் இருக்கின்றது. நாம் எங்கே புதிய தொழில்நுட்ப்பத்தை கண்டு பிடித்தோம்? வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப்பத்தை பெற்று, அப்படியே பயன் படுத்திகின்றோம். பின்னர் எப்படி நம் நாட்டில் மட்டும் சேவை கட்டணம் குறைவாக இருக்கின்றது? சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உரிமை கட்டணம் குறைவாக இருப்பதால். அதாவது, ஒன்றரை லட்சம் கோடி குறைவாக வசூலித்தால், பொது ஜனங்களுக்கான கட்டணமும் குறைவாக இருக்கின்றது.


நிலமை இப்படி இருக்க, அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ”பொய்யான பொய்யை” ஊர் ஊராய் ஊர்வலமாய் எடுத்து சொல்வதும் மோசடியே.

வெள்ளி, 5 நவம்பர், 2010

என் பாகிஸ்தான் சகோதரிக்கு

நீ நலமாயிருக்க
நான் நலமாயிருக்கின்றேன்
நான் நலமாயிருக்க
நீ நலமாயிருக்கின்றாயா?

சீதனமாய்த்தானே கொடுத்தோம்
ஹரப்பாவையும் மொகஞ்சதாரோவையும்
பாகப்பிரிவினைனு
சொல்லிவிட்டார்கள் பாவிகள்

நம்முடைய பலத்தை
அன்பைவைத்து அளப்போம்
அணுகுண்டுகளை
வைத்து வேண்டாமே

நம் நாட்டின் எல்லையில்
யார் சுட்டாலும் யார் மாண்டாலும்
ஒட்டை விழுவது என்னவோ
நம் இதயத்தில்தானே

உன் தேசம் தண்ணீரில்
மூழ்கியிருந்த போது
நான் கண்ணீரில்
மூழ்கினேன்

உன்மேல் என் அன்பையும்
என்மேல் உன் அன்பையும்
சிந்துவும் பிரிக்கமுடியாது
இந்துவும் பிரிக்கமுடியாது

நான் மட்டும் வாழ்ந்து நீ வீழ்ந்தால்
நான் எப்படி வாழ முடியும்
ஜெய் பாகிஸ்தான்
ஜெய் இந்தியா.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சிலந்தி வலையில் சிறைபட்ட சிங்கங்கள்

நாங்கள் யார்?
குழந்தைகளா
?
தொழிலாளர்களா?, இல்லை
குழந்தைத்
தொழிலாளிகள்

நாங்கள்......
பூவாகாமலே

புதைக்கப்பட்ட
மொட்டுக்கள்


நாங்கள்......
துவக்கத்தையே

தொலைத்த
முடிவுகள்


நாங்கள்......
முகவுரையிலேயே

முடிவுரையாய்
போனவர்கள்


நாங்கள்......
கல்
உடைக்கும்
செதுக்கப்படாத
சிற்பங்கள்


நாங்கள்......
சிலந்தி
வலையில்
சிறை பிடிக்கபட்ட
இளம்
சிங்கங்கள்

நாங்கள்......
ஐம்பதிலும்
வளைவோம்
சம்மட்டி அடித்து
ஐந்திலேயே
வளைந்துவிட்டோமே

நாங்கள்......
இந்தியாவின்
எதிர்கால தூண்கள்
இப்போதைய வேலை
செங்கல்
சூளையில்

நாங்கள்......
மத்தாப்பு
தொழிற்சாலையில்
புஸ்வாணம் ஆகிபோன
எதிர்கால
நட்சத்திரங்கள்

நாங்கள்......
இறக்கைகள்
இருப்பதையே
இருட்டடிப்பு செய்யப்பட்ட
பறவைக்
குஞ்சுகள்

நாங்கள்......
கிழக்கிலேயே

அஸ்தமிக்கும்
சூரியன்கள்


நாங்கள்......
தீப்பெட்டி
தொழிற்சாலையில்
கருகிப்போன
தீக்குச்சிகள்


நாங்கள்......
இந்நாட்டு
மன்னர்களாம்
மாடு மேய்க்கும்
மாயாண்டியுமா
?

எங்கள்
இந்தியாவின்
எதிர்காலம்
இளைஞர்கள் கையிலாம்
பூ
விற்கும் சிறுமி கைலோ பூக்கூடை

நாங்கள்......
சுண்டல்
விற்கும்போது
இளமைப் பருவமே
சுனாமியால்
சுருண்டுவிடும்

நாங்கள்......
சாலையில்
'குழந்தைகள் ரைம்ஸ்'
புத்தகம் விற்கும்

பள்ளிசெல்லா
குழந்தைகள்

நாங்கள்......
திருவிழாவில்
தொலைந்ததுபோல்
திக்கு தெரியாமல்
தொழிற்சாலையில்


நாங்கள்......
குழந்தை
என்ற
முகவரி இழந்த
முகங்கள்


நாங்கள்......
கொண்டாட்டங்கள்
கேட்கவில்லை
கூடங்கள்

பள்ளிகூடங்கள்
தான்

அப்பா......
பள்ளிகூடம்
செல்லும்
பாதை மட்டும்
காட்டேன்
எனக்கு

அம்மா.....
பட்டரை
சுத்தியலைவிட
பாடப்புத்த்கம்
கனமானதா
?

அண்ணா...
சட்டைக்கு
காஜா
போட்டது போதும்
பள்ளிச்
சீறுடை வங்கித்தா எனக்கு

அக்கா....
சிலேட்டும்
பலப்பமும்
வாங்கி கொடேன்
உளிகள்
சுமந்து கை வலிக்கிறது

எங்களுக்கு வேண்டாம்
மே
தினக் கொண்டாட்டம்
எங்களை குழந்தைகளாகவே
இருக்க
விடுங்கள்

கைமட்டும் கொடுங்கள்
எங்கள்
கால்கள்
வாழ்கையின் அடுத்த
அடி
எடுத்து வைக்க !
பால்ராஜன் ராஜ்குமார்