புதன், 18 ஜனவரி, 2012

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம்

மனித கலாச்சாரமே நதி கரையில்தான் பிறந்து வளர்ந்ததாய் சரித்திர ஆய்வாளர்கள் சொல்லுவார்கள். நாகரீகத்தின் தொட்டில் நதி கரைகள்தான். சுமேரியாவிலிருந்து சிந்துசமவெளி கலாச்சாரம் வரை நதி கரையைதான் நாகரிகத்தின் வெளிப்பாடுக்கான இடங்களாக குறிப்புகளில் உள்ளன.

நதிகரையில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையை அந்த நதியின்றி நினைத்துகூட பார்க்க முடியாது. அது கரை புரண்டு ஒடும் கங்கையானாலும் சரி, வருடத்தில் முழுவதும் மணல் ஓடும் வைகையானாலும் அவர்களுக்கு அப்படி ஒரு பிணைப்பு நதியோடு. வைரமுத்து வராக நதி, வைகை நதின்னு அவர் எழுத்தில் நதிகளின் நினைவுகள் பெருக்கெடுத்து ஓடும்.

நதிகளில்ல சிற்றூர் பேருர்களிலும் கலாச்சாரத் தொட்டில், அங்கு இருக்கும் குளங்கள்தான். அதனால் மனித கலாசாரம் நீர் சார்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்படிபட்ட குளம் சார்ந்த ஊர்தான் ஸ்ரீவில்லிபுத்தூர். அங்கு இருக்கும் குளம்தான் ‘திருமுக்குளம்’. ஊரில் மக்களுக்கு தேவையான பெரிய நீர் தேக்கமாயிருக்கின்றது.

சுகா எழுதிய ’மூங்கில் மூச்சு’ல், திருநெல்வேலியில் தாமிரபரணி ஆறு ஒவ்வொரு வீட்டின் ரேசன் கார்டிலும் சேர்க்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் என் போன்ற ஸ்ரீவில்லிபுத்தூர்காரர்களுக்கோ அல்லது அங்கு இளம்பிராயத்தை கழித்த ஒவ்வொருக்கும் ‘திருமுக்குளம்’ என்பது நினைவு கார்டிலும் (Memory card) பதியப்பட்டிருக்கும். சுலபத்தில் அழிக்க முடியா பதிவாயிருக்கும்.

நான் படித்த சி.எம்.எஸ் மேல் நிலை பள்ளிக்கு, திருமுக்குளம் வழியாகத்தான் போக வேண்டும். நான் உடம்பு சரியில்லாத நாட்களைதவிர மற்ற நாட்களில் பள்ளிக்கு செல்லாமல் இருந்தில்லை. திருமுக்குளத்தை ஒரு நாளும் பார்க்காமல் இருந்தில்லை. பள்ளி முழு ஆண்டு விடுமுறையிலும் குளத்தை பிரிந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்போதுதான் நாள் முழுவதும் குளத்தில் இருப்போம். கோடையில், நடுக்குளத்தில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் இருக்கும், மற்றபடி தண்ணீர் வற்றிய குளம்தான் எங்களின் கிரிக்கட் மைதானம். குறைந்து 10 அல்லது 15 குழுக்கள் எப்போதுமே விளையாடுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் நிறையாது, நல்லா மழை பெய்தால்தான் நிறையும். குளம் நிறையும் போது பார்பதற்க்கு மனதிற்க்கு சந்தோசமாயும், கண்ணுக்கு ரம்மியமான காட்சியாகவும் இருக்கும். குளம் நிறைந்தவுடன், போலீஸும், முனிசிபாலிட்டிலிருந்தும் தண்டோரா போடுவார்கள் – ’திருமுக்குளத்திற்கு பெற்றோர், தங்கள் குழந்தைகளைத் தனியே குளிக்க அனுப்ப வேண்டாம்’. ஆனால் அதில் ஒரு சோகம் என்னவென்றால், ஒவ்வொரு வருடமும், குளம் நிறைந்தவுடன் ஒரு பையன் நீரில் முழுகி செத்துவிடுவான். இறந்த செய்தி அறிந்தவுடன், போட்டது போட்ட படியே, அது பள்ளிகூடம் நடக்கும் நாளாயிருந்தால், எங்க அம்மா பள்ளிகூடத்திற்க்கே பதட்டத்துடன் வந்துவிடுவார்கள். நானும், எனது தம்பிகளும் பத்திரமாய் இருப்பதை பார்த்தால்தான் அவர்களுக்கு நிம்மதி. ‘பள்ளிகூடம் விட்டவுடன், ஒழுங்காக வீட்டுக்கு வரணும். திருமக்குளம் பக்கம் போன........”னு மிரட்டி செல்வார்கள்.

விறகுக்கு மலைக்கு செல்லும் விறகுக்கார பெண்கள் ”மேற்க நல்ல மழை, இன்னும் இரண்டு நாளில் திருமக்குளத்துக்கு தண்ணீர் வரும்’னு சொல்லும் போதே எங்களுக்கெல்லாம் உற்ச்சாகம் தொற்றி கொள்ளும். குளத்தின் மூணு மதகிலயும் தண்ணீர் அருவியா கொட்டுதுனு சொல்லும் போதே எங்க அம்மா மற்றும் தெருவிலிருக்கும் பெண்களுடன் சேர்ந்துபோய் பார்போம். குளம் நிறம்பியதும் மீண்டும் ஒருமுறை கூட்டமாய் சுற்றுலா பயணம் இருக்கும். ராஜபாளையத்திலிருக்கும் எங்கள் அக்காகூட இதற்க்காக வந்து போவார்கள்.

குளத்தின் தென்கிழக்கில் இருக்கும் அரச மரத்து துறையில் பையங்க யாரும் குளிக்க மாட்டார்கள். பெண்கள்தான் குளிப்பார்கள். அங்கிருக்கும் சுவற்றிலிருந்து ‘தொம்....தொம்’ என்று குதித்து நீச்சல் அடித்தால் பெண்கள் வைவார்கள். அதனால் பையங்க எல்லோரும் கீழ்பக்கக்கரையில் இருக்கும் படிதுறையில்தான் குதித்து குளிப்போம், தண்ணீர் நிறைந்திருக்கும் போது தீர்த்தவாரி மண்டபதின் மேல்ஏறி, அங்கிருந்தும் குதிப்போம். மணி கணக்காக குளிப்போம். நேரம் போவதே தெரியது. பசி எடுத்தாதான் வீட்டுக்கு போவோம். கலை வேலையில் நல்ல கூட்டம் இருக்கும். மேலேயிருந்து குதித்தால் சில பெரியவர்கள், வேறு படிதுறைக்கு துரத்திவிடுவார்கள். மத்தியானத்திற்க்கு பின் போனால் ஜாலியாக குளிக்கலாம். ஆனால் அந்த நேரத்தில், அங்கு ஒரு பைத்தியம் வரும். நிஜமாலுமே, அந்த ஆள் பைத்தியம்தான். அழுக்கான லுங்கி மட்டுமே உடுத்தியிருக்கும். கையில் ஒரு நீளமான கம்பு இருக்கும். அதனால் எங்களுக்கு என்ன பிரச்சனைனா? எங்களை மாதிரி சின்ன பையன்களை குளிக்க விடாமல் விரட்டும். எங்களை விரட்டிவிட்டு ஆளில்லாத படித்துறையில் இறங்கி போயி, கையிலிருந்த் கம்பால் தண்ணீரை விலாசு விலாசும். அதற்கு, பயந்து கொஞ்ச தூரம் சென்று விடுவோம். தூரதிலிருந்து, அந்த பைதியத்தை நோக்கி கல்லெறிந்து ”தகர டப்பா”னு காத்தினால் அடிக்க வரும். திருமுக்குளத்தில் நீச்சலடிப்பது போக இதுவும் ஒரு விளையாட்டாய் ஆகிவிடும்.

ஒரு நாள் இதை பார்த்த சுந்தரம் மாமா, எங்களையெல்லாம் திட்டிவிட்டு, அந்த பைத்தியத்திடம் போய், ‘மூர்த்தி வீட்டுக்கு போடா, அவனை நான் கூட்டியாறேன்”னு சொன்னார்கள். மந்திரத்திற்க்கு கட்டுபட மாதிரி, பைத்தியம் அப்படியே தெருவில் இறங்கி நடந்து சென்றது. அதன் பின் எங்களை கூப்பிட்ட சுந்தரமாமா, ’டேய் அவனை கல்லை கொண்டு அடிக்காதங்கடா. அவன் மகனுக்கு உங்கள் வயசு இருக்கும் போது இந்த குளத்தில் முழுகி செத்து போய்ட்டான்டா. அத நெனச்சி நெனச்சி அவனுக்கு பைத்தியமே பிடிச்சி போச்சி. அதான் உங்கள மாதிரி பையன்களை குளிக்கவிடாமல் வெரட்டுகிறான். இந்த தண்ணீதான என் மகனை கொன்னதுனு, கம்பால தண்ணிய் போட்டு அந்த அடி அடிக்கிறான். அவன் பையனை நான் கூட்டிவருவதாய் சொன்னவுடன் எழுந்து போயிட்டாம்பாரு. நல்ல நெசவாளிடா வினாயக மூர்த்தி”.

இதை சொல்லிவிட்டு, துண்டை இருப்பில் கட்டிக் கொண்டு, வேட்டியை அவிழ்த்து தண்ணில் நனைத்து துவைத்து குளிக்க ஆரம்பிதார் சுந்தரம் மாமா. எங்களுக்குத்தான அதன் பின் குளிக்க முடியவில்லை.

1 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆனால் என் போன்ற ஸ்ரீவில்லிபுத்தூர்காரர்களுக்கோ அல்லது அங்கு இளம்பிராயத்தை கழித்த ஒவ்வொருக்கும் ‘திருமுக்குளம்’ என்பது நினைவு கார்டிலும் (Memory card) பதியப்பட்டிருக்கும். சுலபத்தில் அழிக்க முடியா பதிவாயிருக்கும்.
ஆஹா. அருமை. ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் பற்றிய இன்னொரு அருமையான பதிவு. வாழ்த்துகள் திரு பால்ராஜன் ராஜ்குமார். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி Poornima Shenbaga Moorthy. இந்த நல்ல பதிவின் இணைப்பை கொடுத்ததற்கு.

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்