வியாழன், 1 டிசம்பர், 2011

வேப்ப மரம்

காலையில் அப்பார்ட்மெண்டில் நுழையும் போதே எதிர்பட்டார்கள், கணவனும், மனைவியும். அவர் ராமசாமி, எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் செக்ரட்டரி. உடன் இருந்தது அவரின் மனைவி. அந்த் பெண்மணியின் கையில் வயரில் பின்னிய கூடை இருந்தது. அது அவர்கள் கோவிலுக்கு போய் வருவதற்க்கான அடையாளம். அவர் பெயருக்குதான் செக்ரட்டரி, ஆனால் நடந்து கொள்வதோ, ஒரு பொறுப்பான உரிமையாளர் மாதிரிதான். வாச்மேன், பெருக்கி சுத்தம் செய்பவர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற எல்லோரையும் மேய்ப்பது அவர்தான். தான் வீட்டுக்கு பண்ணுவது மாதிரியேதான் அப்பாட்மெண்டில் இருக்கும் இருபத்தி நாலு வீட்டுகளுக்கும் தேவையான ரிப்பேர் வேலைகளை இழுத்துப் போட்டு செய்வார். எங்கள் குடியிருப்பில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் சொல்லுவதை யாரும் எதிர்த்து கூறுவதும் இல்லை, அவர் செய்யும் வேலையில் யாரும் உதவியும் செய்வதும் இல்லை. அவரும் யாருடைய உதவிக்காகவும் காத்திருப்பதில்லை. பண்ணவேண்டிய வேலைகளை அவரே முடித்துவிட்டு, அடுத்து நடக்கும் அப்பார்ட்மெண்ட் கூட்டத்தில் சொல்லுவார். சில வேலைகளில் அவரே வந்து, ”உங்கள் வீட்டுக்கு வரும் தண்ணீர் குழாயில் ஓட்டையிருக்கிறது. தண்ணீரொல்லாம் வீணாக போகினறது. பிளம்பரை வரச் சொல்லியிருக்கின்றேன், இன்று மாலைக்குள் ரிப்பேர் செய்து விடுவான்” என்பார். சொன்ன மாதிரியே பிளம்பரை விரட்டி விரட்டி வேலை வாங்கி மாலைக்குள் பிரச்சினையை தீர்த்துவைப்பார். எல்லாவேலைகளையும் நல்லபடியாக முடித்தும் விடுவார். வெகு சில நேரங்களில் மட்டும், தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டு குழப்பத்தில் கொண்டும் விட்டுவிடுவார். அவர் பொது துறை வங்கியொன்றில் வேலை செய்து ரிட்டைடு ஆனவர். காலையில் பார்த்ததும் நான் தான் கேட்டேன்.


”என்ன சார், இன்று இரண்டாவது சனிக்கிழமை. அப்பார்ட்மெண்ட் கூட்டம் இருக்கா?”

”ஆமா......இருக்கு. பத்து மணிக்கு வந்துவிடுங்கள்” என்று சொல்லி, சிறிது இடைவேளைக்குப் பின் அவரே தொடர்ந்தார்.

”இப்பத்தான் கோயிலுக்கு போயிட்டு வருகின்றோம். சனீஸ்வரனுக்கு எள்ளு பொட்டலம் போட்டு விளகேற்றி பூஜை செய்துவிட்டு வருகின்றோம். இன்றோடு பதினோரு சனிக்கிழமையும் முடிந்தது” என்று ரெம்ப மகிழ்ச்சியுடனும், ஏதோ சாதித்தது மாதிரியும் சொன்னார்.

”இத்தோடு, நம் அப்பார்ட்மெண்டை பிடித்த சனி தொலைந்தது.....” என்று பலமாக சிரித்தார். அவர் மனைவியும் அந்த சிரிப்பில் கல்ந்துகொண்டார். நான்தான், முகத்தில் புன்னகை புரிவது மாதிரி காட்டிக் கொண்டேன். மனத்திற்குள் எரிச்சல்தான். வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “சனியா பிடித்திருக்கின்றது.....சனி, பைத்தியம்தான் பிடித்திருகின்றது இந்த் ஆளுக்கு.” என்று நான் மனதுக்குள் சொல்லிகொண்டேன். பதினோரு சனிக்கிழமை கோவிலுக்கு செல்வதற்க்குப் பதில் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தால், பைத்தியமாவது தெளிந்திருக்கும்.

”சரி சார். மீட்டிங்குக்கு வந்துர்றேன்.” னு சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடையை கட்டினேன். என்னுடைய வீடு, ஆறாம் நம்பர் வீடு. நாலு நாலு வீடுகளாய், மொத்தம் ஆறு வரிசைகளில் வீடுகள் இருக்கும். முதல் வரிசையில் உள்ள வீடு ஒன்றாம் நம்பரிலிருந்து நான்காம் நம்பர் வரையிருக்கும். ஜந்தாம் நம்பர் முதல் எட்டாம் நம்பர்வரை இரண்டாவது வரிசை. ஜந்தாம் நம்பர் வீடு தரை தளம், ஆறாவது வீடு முதல் மாடி. அதுதான் எங்கள் வீடு. எங்கள் ராஜ்யம். என் மனைவிதான் மகாராணி, நான் முடிசூடா மன்னன். எங்கள் மகன்தான் இளவரசன். நாங்கள் முன்றுபேர்தான். வீட்டின் பராமரிப்பு முழுவதும் என் மனைவியின் பொறுப்புதான். வீடு, இரண்டு பெட் ரூம் உள்ள சிறிய வீடுதான். ஒரு ஹால். சாப்பாட்டு அறை, அப்புறம் சமையல் அறை. இந்த்பக்கம் இரண்டு படுக்கை அறையும், அதற்கு இடையில் குளியல்றையும் கக்கூசும் இருக்கும். இந்த சிறிய வீட்டையே என் மனைவி சென்டிமீட்டர்.. சென்டிமீட்டராய் அழகு செய்திருப்பாள். சுத்தமும், நேர்த்தியும் அவளுக்கு கைவந்த கலை. அவளுக்கு பிடித்தமானதும் கூட. இப்போது என்று இல்லை, கட்டிட வேலை நடக்கும்போதே,வீட்டை நானும் அவளும் தினமும் வந்து பார்போம். மனதில் பட்ட புது புது ஜடியாக்களைக் கட்டட காண்ராக்ட்டரிடம் சொல்லுவாள் அவ்ள். வீட்டின் ஒவ்வோரு கட்டுமானத்தையும் பார்த்து பார்த்து ரசித்தோம்.

பதினைந்து ஆண்டுகள் ஆனாலும், இன்றும் அப்படியே இன்றும் ஞாபகத்திலிருக்கின்றது, நாங்கள் இந்த வீட்டை வாங்கியது. வீடு வாங்க வேண்டும் என்ற பொறி போட்டதே என் மனைவிதான். பொறிபோட்டது மட்டுமல்லாமல், அதை ஊதி ஊதி பெரிதாக்கி வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையையே உண்டாக்கிவிட்டாள். சரி வீடு வாங்க எவ்வளவு செலவாகும், நம்முடைய சேமிப்பில் எவ்வளவு என்று கணக்கு போட்டோம். ஆபீஸ் நண்பர் கொடுத்த வீட்டு கடன் ஜடியாவையும் சேர்த்தாலும், பெரிய துண்டு விழுந்தது. பணத்திற்க்கு என்ன சொய்வது என்று தெரியாமல் சோர்ந்து போனோம். துண்டு விழுந்த பண்த்திற்க்கு ஜடியா கொடுத்ததும் என் மனைவிதான். ஆம்...அவளின் தங்க நகைகளை விற்றால், வரும் பணம் சரியாக இருக்குமென்றாள். என்க்குத்தான் மனதுக்கு ஒரு மாதிரி இருந்தது, அவளுக்கு பிடித்தமான நகைகளை விற்க வேண்டியிருக்க்ன்றதே என்று. அதற்கு அவள்,

”பிடித்தமான நகைகளை விற்று, பிடித்தமான வீடுதானே வாங்குகின்றேம். நகை எப்போது வேண்டும்னாலும் வாங்கலாம். வீடு வாங்கின்றதுதான் கஷ்ட்டம்.” என்று சொன்னாள். எனக்கும் சரி என்றே பட்டது.

பணத்திற்க்கு வழி வந்தவுடன், வீடு தேட ஆரம்பித்தோம். பல இடங்களில் அலைந்து தேடி, இங்கு வந்து பார்க்கும்போது, இந்த அப்பார்ட்மெண்ட் இருக்கும் இடம் காலி மனைதான். மேற்கு ஒரத்தில் ஒரு கிணரும், கிணற்றுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு வேப்பம் கண்ணுவும் மட்டுமே இருந்தன. இடமும் எங்களுக்கு பிடித்துப் போயிற்று. சிறிய தொகையை அட்வான்ஸாக கொடுத்து வீட்டை புக் செய்தோம். கையிலிருந்த பணத்தை கொடுத்து பத்திர பதிவை முடித்தொம். பின்னர், வீட்டு கடனுக்கு விண்ணப்பித்து, அந்த பணம் வந்தும், பில்டரிடம் கொடுத்தோம். வீட்டு வேலை மள மளவென்று நடந்து. வீடு கட்டி முடிந்து நாங்கள் குடிவர ஒன்றேகால் வருடமாகிவிட்டது. எங்கள் சமையலறை ஜன்னலுக்கு பின்னால், முதல் மாடிவரை நன்றாக வளர்ந்து கிளைவிட்டு வேப்பமரமாயிருந்த்து, அந்த சிறிய வேப்பங்கண்ணு. மர நிழலும், காற்றும் பட்டு சமையலறையே குளுகுளுனுதான் இருக்கும் எப்போதும். அந்த வேப்ப மரத்தில் அணில்கள் துள்ளி குதித்து விளையாடுவதும், குருவி முதல் பல வகை பறவைகளும் வந்து அமர்ந்து பாடிவிட்டு பறந்து போவதை பார்த்துக் கொண்டே சமையல் செய்வது என் மனைவிக்கு நல்ல பொழுது போக்காகிப்போனது. அவை ஒவ்வென்றும், ஷிப்டு போட்டு வந்து போகும். காலையில் முதலில் வந்து ஆஜராவது சிட்டுகுருவிகள்தாம்.

”என்ன இன்னைக்கு இவ்வளவு லேட்? ஊரெல்லாம் சுத்திட்டு இப்பதான் வர நேரம் கிடைத்ததா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது சிட்டுகுருவிகளிடம்தான். காலை சமையல் சிட்டுகுருவிகளுடன் பேசிக்கொண்டே முடியும். குருவிகளும் கொஞ்சநேரம் வேப்பமரத்தில் இருந்துவிட்டு செனறுவிடும். அவர்களுக்கு பின் வருவது இரண்டு மூன்று அணில்கள். அவைகள் மரத்தின் கிளைகளில் ஒடி விளையாடிக்கொண்டிருக்கும். வேப்பம்பழத்தை அணில்கள் சாப்பிடுவதை ரசித்து பார்த்தும், அதை எங்களிடம் சொல்லியும் சந்தோசப்படுவாள். அவைகள், பின்னங்கால்கள் இரண்டயும் ஊன்றி உக்கார்ந்து கொண்டு, முன்னங்கால்களால் பழத்தை இறுக்கமாய் பிடித்துக்கொள்ளும். யாரோ வந்து பிடிங்கிகொண்டுபோய்விடுவது மாதிரி அவசர அவசரமாய் சாப்பிடும். பிடித்திருந்தால் முழு பழத்தையும் சாப்பிடும், இல்லையென்றால் ஒரு கடியில் தூக்கிப் போட்டுவிடும். சாப்பிட்டு முடித்தபின் அங்கும் இங்குமாய் கிளைகளில் ஆட்டம் போட்டுவிட்டு, அவைகளும் சென்றுவிடும். இப்படி தினம் தின்ம் ஒரு புதிய கதைகள் எங்களுக்கு கிடைக்கும். வேப்பமரத்திற்க்கு வாடிக்கையாக வரும் குருவி, அணில்களிலிருந்து, அப்பப வந்து போகும் பறவைகள் வரை எல்லாமே அத்துப்படி. அணில்களை ஒவ்வொறாய் அடையாளம் தெரியும். எனக்கும் காண்பித்து கொடுப்பாள். எனக்கு என்னமோ எல்லா அணில்களும் ஒரே மாதிரித்தான் தெரியும்.

ஒரு நாள், புதிதாக இரண்டு காகங்கள், வேப்பமரத்திற்க்கு ரெகுலராக மதிய வேலைகளில் வருவதாய் சொன்னாள். அதில் ஒன்று ஆண் காகம் என்றும் ஒன்று பொண் காகம் என்றும் சொன்னாள். அது எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது? என்று மகன் கேட்ட கேள்விக்கு,
”உற்று காக்கைகளைப் பார்த்தாலே, அதன் நடவடிக்கையிலே தெரியும்” என்று சொல்லி என்னைப் பார்த்தாள். எனக்கு ஒன்றுமே புரியாமல் திரு திரு என முழித்தேன். உடனே என் மனைவி,

”இப்படித்தான் ஆண் காகம் முழிக்கும், அதிலேயே கண்டுபிடித்து விடலாம்” என்று என்னைப்பார்துச் சொல்லி, கிண்டல் செய்தாள். எல்லேருமே சிரித்துவிட்டோம். மற்றொரு நாள், அந்த் காகங்களில் ஒன்று மரக்கிளையிலிருந்து, எங்கள் வீட்டை நோக்கி கரைந்து கொண்டே இருந்த்து. என் மனைவி,

“சரி சரி போதும்” என்று அதட்டலாய் காகத்திடம் சொன்னாள். இதைப் பார்த்த மகன், ”காக்கா என்னமா சொல்லுது?” என்று கேட்டான்.

”காகம் இப்படி வீட்டைப்பார்த்து கத்தினால், நம்ம வீட்டுக்கு விருந்தினர்கள் வரப் போகின்றார்கள் என்று அர்த்தம்.” னு பதில் சொன்னாள் மனைவி.

”யாரு வருவானு காக்கா சொல்லுமாமா?” என்று அடுத்த கேள்வி கேட்டான் மகன்.

”சேகர் மாமா வருவான்” என்று சொல்லி சமாளித்தாள் என் மனைவி.

சேகர் அவளின் தம்பி. அடிக்கடி வியபார விசயமாய் ஊருக்கு வருவான். வரும்போதொல்லம் ஒரு நடை வீட்டுக்கு வந்துவிட்டுப் போவான். என் மகனுக்கும் சேகர் மாமாவென்றால் பிரியம்தான். சொன்னமாதிரியே, அன்று மதிய வேளையில் சேகர் வீட்டுக்கு வந்தான். அவனை பார்த்தவுடன், என் மகன்,

”மாமா, நீங்கள் வருவீங்கன்னு எங்களுக்கு தெரியும்.”

” எப்படிடா, தெரியும் உங்களுக்கு?” கேட்டான் சேகர்.

”காக்கா, அம்மாகிட்ட சொல்லுச்சி” இது, என் மகன்.

”யாரு? இந்த காக்காவா?” னு என்னைப்பார்த்து கிண்டல் செய்து, என் மகனிடம் கேட்டான்.

”இல்ல மாமா....நிஜக் காக்கா சொல்லுச்சி” என்றான் மகன்.

”இதுவும் நிஜக் காக்காதான்” சேகர் சொன்னான்.

”ம்..மாமா....அம்மாவிடம் வேணுமானால் கேளுங்கள்” என்று சொன்ன மகன், மனைவியை சமையலறையிலிருந்து கையை பிடித்து இழுத்து வந்தான். தம்பியை பார்த்த மனைவி,

”வா... சேகர், இப்பதான் வர்ரயா? சாப்பிடுகிராயா? ” என்னாள் மனைவி.

”இல்லக்கா....இப்ப்த்தான் சாப்பிட்டேன்” எனறு பதில் சொன்னான் சேகர்.

இப்படித்தான், தின்மும் காக்கா கதையும், குருவி கதையும் வழக்கமாகிவிட்டது எங்கள் வீட்டில்.

சில வாரங்களுக்கு முன்பு எனது மனைவி சொன்னாள்,

”காகம் ரெண்டும் குச்சிகளை எடுத்துவந்து மரக்கிளையில் வைக்கின்றது. கூடு கட்டபோகிறதுனு நினைக்கின்றேன்”

அவள் சொன்ன மாதிரியே இரண்டு நாட்களில் கூடு கட்ட ஆரம்பித்தன. காக்கை கூடு கட்டுவது என்பது நாம் வீடு கட்டுவதை போன்றதே. முதலில் பெரிய பெரிய குச்சியாக வைத்து பலமான அடித்தளமிடும். பின்னர் சின்ன சின்ன சுள்ளியாகவைத்து கட்டும். அப்போது, கூடு சுமாரான வட்டவடிவில் இருக்கும். இந்த நேரத்தில் பெண் காகம் கூடுக்குள் உட்கார்ந்து பார்க்கும். சில குச்சிகளை மாற்றி அமைக்கும் அல்லது மேலும் சில குச்சிகளை சேர்க்கும். அதன் பின்னர் காய்ந்த புல்லையோ, வைக்கோலையோ கொண்டுவந்து மேலே போட்டு கூட்டை மெத் மெத்தென்றாக்கும். நாம் கட்டிலில் மைத்தை போட்டு படுப்பது மாதிரி. அப்போதும் காகம் கூடுக்குள் உட்கார்ந்து பார்க்கும். சிறு சிறு திருத்தம் செய்யும். அத்ன் பின் பெண் காகம் கூட்டிலேயே நெடுநேரம் செலவிடும். இதை பார்த்த என் மனைவியின் கணிப்பு, ”முட்டையிட்டு குஞ்சு பொரிக்கப்பேகின்றது காகம்”.அதே மாதிரிதான் நடந்த்து.

மூன்று மாதங்களுக்கு முன், என் மனைவியுடன் கல்லுரியில் படித்த நிஷாவின் கணவரும், அவர்களின் ஜந்து வயது மகளும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். நிஷாவின் கணவர், ஒரு சுவீட் பாக்கட்டை கொடுத்து, தாங்களுக்கு இரண்டாவதாக பையன் பிறந்திருப்பதாய் சொன்னார். என் மனைவி அந்த் குழந்தையிடம் கேட்டாள்,

”உங்க வீட்டுக்கு குட்டி பாப்பா வந்திருக்கா?”

”ம் ஆமா ஆன்டி” இது குழந்தை சொன்ன பதில். பதில் சொல்லும்போதே, குழந்தையின் கண்களில் குதுகுலம்.

”குட்டி பாப்பா என்ன சொல்கின்றான்?”

” குட்டி பாப்பா தூங்கிக்கிட்டே இருக்கின்றான். தூங்கிட்டிருக்கும்போதே சிரிப்பான் ஆன்டி. ஆனா, அழும்போது மட்டும் முழித்துப்பார்பான்”

”அப்படியா?. சரி.....அடுத்ததடவை வரும்போது அவனை கூட்டிட்டு வருவையா? எங்க வீட்டுல இருக்கின்ற மரத்தில், குருவி, காக்காயெல்லம் இருக்கன்றது. நாம அவனுக்கு காண்பிப்போம@

”எங்க இருக்கு ஆன்டி ....” குழந்தை கேட்டது.

இப்போது என் மனைவிக்கு குதுகுலம், குழந்தையை கூட்டிக்கொண்டு, சமையலறைக்கு சென்றாள். அங்கிருந்து, வேப்ப மரத்திலிருந்த காக்காவின் கூட்டை காண்பித்து கொடுத்தாள்.

”காக்கா ஏன் ஆன்டி அங்கயே உக்காந்திருக்கு?” குழந்தையின் கேள்வி.

”காக்காவுக்கும் ஒரு குட்டி காக்கா பாப்பா வரப்போது...” மனைவி காக்காபுராணத்தை ஆரம்பித்தாள். காக்கா கதையை முழுவதுமாய் கேட்டுவிட்டு சென்றார்கள்.

அவர்கள் வந்து சென்றபின், ஒரு ஞாயிற்றுக்கிழமை நிஷாவின் வீட்டுக்கு பிறந்த குழந்தையையும் அவர்களையும் பார்க்க சென்றிருந்தோம். எங்களை பார்த்ததும், அவர்களின் மகள், என் மனைவியைப் பார்த்து ஆர்வமாய் கேட்ட முதல் கேள்வியே,

”காக்காவுக்கு குட்டி பாப்பா வந்திருச்சா ஆன்டி? “

”இன்னும் வரல....குட்டி பாப்பா வந்தவுடன் சொல்ரேன். நீ, உன் தம்பி பாப்பாவுடன் எங்க வீட்டுக்கு வரணும்“

சரின்னு அந்த் குழந்தையும் தலையாட்டினாள். பின்னர், நாங்கள் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் நுழைந்த உடன், காகத்தின் இடைவிடாத சத்தத்தைக் கேட்டு, என் மனைவி சமையலறைக்குச் சென்று பார்த்து, சத்தம் போட்டாள்,

”ஏங்க இஙக வாங்களைன் .........”

நானும் என் மகனும், என்னமோ .....ஏதோன்னு சமையலறைக்கு ஒடினோம். அங்கு, ஜன்னலைத் தாண்டி ஒரே வெட்ட வெளி. வேப்ப மரத்தைக் காணவில்லை. பால்கனிக்கு வந்து பார்த்தால், மரம் வெட்டப்பட்டு கிடக்கின்றது. காககையின் கூடு சிதைந்து போய், காக்கையின் முட்டை உடைந்து மஞ்சள் கரு சிதறி தரையில் கிடந்தது. காகம் இரண்டும், மாறி மாறி வந்து முட்டையை பார்த்து கத்திக்கோண்டே இருந்தன. என்ன நடந்தென்றே புரியவில்லை எங்களுக்கு. அப்பார்ட்மெண்ட் வாச்மேனை கூப்பிட்டுக் கேட்டேன். அதற்க்கு அவ்ர்,

”சார், உங்களுக்கு விசயமே தெரியாதா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அவரே தெடர்ந்தார்,

”வேப்ப மரத்தில் காக்கா கூடு கட்டி முட்டை போட்டுருந்திச்சாம். அப்பிடின்னா, நம்ம அப்பார்ட்மெண்ட்க்கு சனி குடிவந்திருமாம். அதனால், செக்ரட்டரி சார்தான் காக்கா கூட்டோடு சேர்ந்து மரத்தையும் காலி பண்ணச்சொன்னார்.”

”அப்பார்ட்மெண்டுக்கு சனி பிடிக்கல, அவ்ருக்குதான் பைத்தியம் பிடித்திருக்கின்றது.” என்றேன் நான்.


என் மகன், மனைவியிடம் கேட்டான்,

”காக்கா, இப்ப என்னம்மா சொல்லுது?”

”காக்கா எதுவும் சொல்லலைப்பா, அழுகின்றது. அதன் முட்டையை யாரோ உடைத்துவிட்டர்கள். அதனால், அழுகின்றது,” என்று மனைவி பதில் சொன்னாள்.

மனிதர்களை பற்றி அந்த காகங்கள் ரொம்ப மட்டமாய்தான் நினைத்திருக்கும். காகங்களின் சத்தம் குறையவேயில்லை, வெகு நேரம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்